ஞானம் - 20
| அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி அகாரமெனும் எழுத்த துவே பாதமாகி முடியாகி நடுவாகி மூலந் தன்னில் முப்பொருளுந் தானாகி முதலு மாகிப் படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற் படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி அடியாகு மூலமதே அகார மாகி அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. |
1 |
| அதுவாகி அவனவளாய் எல்லா மாகி அடிநடுவு முடிவாகி அகண்ட மாகிப் பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கு மூல மாகி மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி மலராகி மணமாகி மதிக்க வொண்ணா அதுவாகும் அகாரமதே மூல மாகி அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம் மூல மாமே. |
2 |
| மூலமெனு மாதார வட்டந் தானே முச்சுடரு முக்கோண மூன்று நாடிச் சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந் திருவடியுந் திருமேனி நடமு மாகும் கோலமு டனண்டமெல்லாந் தாங்கிக் கொண்டு கொழுந்து விட்ட கம்பமதாய் மேலே நோக்கி ஆலமுண்ட கண்டெமலாந் தானாய் நின்ற அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே. |
3 |
| அறிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்; அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்; பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்; பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்; அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை; அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. |
4 |
| நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை நுண்பொருளாஞ் சிற்பரத்தி னூடே நோக்குந் தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித் திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப் போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார் புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்; ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே அனுதினமும் நோக்கிநிற்பார் ஆசா னாமே. |
5 |
| ஆசானு மீசானு மொன்றே யாகும் அவனவளு மொன்றாகும் அது தானாகும்; பேசாத மந்திரமு மிதுவே யாகும்; வேரொளியின் வடிவாகும்; பேரு மாகும் நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்; நிலையான ஓங்கார பீடமாகும் ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்கு இன்பமுடன் கயிலாச மெய்த லாமே. |
6 |
| எய்தரிய பரமசிவத்தின் மூலந் தன்னில் இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று எய்தரிய பரசிவத்தின் மூலந் தன்னில் இருசுடரு முதித்தொடுங்கு மிடமேயென்று மெய்தொழியுஞ் சுழுமுனையே கம்ப மாகி மெய்ப்பொருளாஞ் சோதியென மேவி நிற்கும்; இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை இருநேர மற்றிடத்தே யிறைஞ்சிக் காணே. |
7 |
| காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்; காணரிய பொருளாகுங் காட்டும் போதே ஆண்பெண்ணாய் அலியாகி அடியு மாகி அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் காணா வெறும்பாழ தாகியே மேவி நின்றார் சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத் தேடரிய பாதமென்றே தெளிந்து நோக்கே. |
8 |
| தெளிவரிய பாதமது அகார மாகிச் சிற்பரமுந் தற்பரமுந் தானே யாகி அழிவரிய சோதியது தானே யாகி அடிமுடிவு முடியாகி யமர்ந்து நின்று மொழிவரிய முதலாகி மூல மாகி முச்சுடருந் தானாகி முடிந்த சோதி சுழியினிலே முனையாகிக் கோப மாகிச் சொல்லரிய வெழுத்தென்றே தொகுத்துப் பாரீர். |
9 |
| தொகுப்பதும் தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்லரிய தத்துவங்கள் தம்மை யெல்லாம் வகுத்துடனே யிவற்றையெலாங் கண்டு நீங்கி வாகான உடலுயிரை வகையாற் கண்டு பகுப்புடனே சேராமற் பாதந் தன்னைப் பரகதிக்கு வழியனெவே பற்றிக் கொண்டு விகற்பமிலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதமென்றே மேவி நில்லே. |
10 |
| மேவியதோர் சற்குருவின் பாதந் தன்னை மெய்ஞ்ஞான மென்றதனை மேவிக் கொண்டு ஆவியுடல் காயமெல்லா மறிந்து பார்த்தே அத்தனார் வடிவமென்றே அறிந்துகொண்டு பாவனையு வானவெல்லாம் விட்டு நீங்கிப் பகலிரவு மற்றிடத்தே கருத்தை வைத்துச் சீவனையுஞ் சிவந்தனையும் ஒன்றாய்த் தானே திருமூலர் பாதமொன்றித் திடமாய்க் காணே. |
11 |