கடுக்காய்
திருவள்ளுவர் ஞானம்
காப்பு
எண்சீர் விருத்தம்
அண்டபிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டபரி பூரணத்தின் அருனே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி
மதுரதமி ழோதும்அகத் தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!
கட்டளைக் கலித்துறை
1. அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் தும்மதி லேயிருந்தும்
நன்னய மாய்ப்பத்துத் திங்களு நானகத் தேயிருந்தேன்;
என்ன அதிசயங் காணிவ் வுலகி லேயமைந்த்
உன்னத மெல்லா மமைத்தேன் உண்மையைக் காண்கிலரே!
2. அம்புலி தன்னி லேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புல கத்தார் வசியமாய்க் கைப்பிடித் தேபிரிந்து
கும்பி தனிலே யுழன்றுமக் குண்டலி பொற்கமலம்
நம்பி யிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே!
தரவு கொச்சகம்
3. அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குங் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயொழித்தேன்;
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே.
4. வையமதி லேயுதிக்கு மாண்பர்களே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகி லாண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே!
கட்டளைக் கலித்துறை
5. வீடான மூலச் சுழிநாத வீட்டில் விளங்கும் விந்து
நீடாழி லோகந் தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாத ழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன?
காடான நாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே?
6. எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியி லெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்துப் பொருள் போதகத்தால்
சுழியக் சுழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நா ளிருந்தும் அனித்தியமே!
7. எந்நா ளிருந்தென்ன முன்னா ளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தான்றி யாதெனத் தந்தைவிதி
உன்னா லழிவ துடலுயிர் காய மொழிவதுங்கண்
டந்நா ளனுப்படி கண்டு மிருந்தறி யாதவரே!
8. யோனிக்கு ளாசை யொழியா தனித்தியமு ங்களுயிர்:
தேனிக்கு ளின்பஞ் சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக் காய முடலற்றுப் போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகா டொழிய இனியில்லையே!
நேரிசை வெண்பா
9. இந்தவுடல் காயம் இறந்தவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கையோ இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண்.
10. ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால்----ஞானமது
கண்டால் உடலுயிருங் காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசம் ஊண்.
11. சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்னஎய்து மாறு-சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண்.
12. வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே வேதமறை
நாலு பொருளுள் நற்பொருளின் ஆறறியப்
பாலுமது நெய்யெனவும் பார்.
13. முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு.
14. காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே- காய்சித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுதுஇனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண்.
15. கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக்குள் ளாகி மரணமார் கல்லுப்பு
வெள்ளைக்கல் லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன்.
16. என்றுமிந்த துப்பாகும் எண்சா ணுடலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ? என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
விரியமா யானுணரு மெய்.
17. உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
முப்புசுன்ன மாவதற்கு முன்னமே-உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
செற்பாயும் வாசியில் தேகம்.
18. அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போம்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில்- அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் காட்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி.
19. எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் கண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி பூசைவிதி யுன்.
முருகப் பெருமானின் கம்பத்துக் காட்சி
அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்புமுனைகளைக் கொண்டது. இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல்.
அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர். இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.
இவரது முற்பிறவிகள் குறித்த தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. அகத்திய முனிவர், நாயொன்றை வளர்த்து வந்தாராம். அந்நாய் தேவேந்திரனாக முதல் பிறவி எடுத்ததாம். பின்னர் அர்ச்சுனன், கண்ணப்ப நாயனார், நக்கீரர், அருணகிரிநாதர் என்ற வரிசையில் அந்நாய்க்குப் பிறப்புகள் உண்டானதாகத் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அருணகிரி புராணத்தில் காணக் கிடைக்கிறது. இதனைக் கட்டுக்கதை என்று மறுத்துக் கூறுபவர்களும் உண்டு. அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர்.
உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம். மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம். இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம். அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.
கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர். அவர் கிளி உருவமாக இருந்தபோதுதான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அருங்கவியின் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாக வெளியிட்டுள்ளது.