தொந்தி இல்லாத அழகிய விநாயகரை உடைய இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேஇருந்த ஒரு கோவில் ஆகும்.
மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும் புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. அங்கே ஒரு சித்தரின் ஜீவா சமாதி உள்ளது அவரின் திரு நாமம் தொள்ளைக்காது சித்தர்
தொள்ளைக்காது சுவாமிகளின்
இயற் பெயர் என்ன ? தாய் தந்தையர் யார்?
எப்பொழுது பிறந்தார்?
எங்கிருந்து வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில் தான் ஊர் மக்கள்முதலில் பார்த்தார்களாம்.
இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டு போய் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன் தான் தன் நிலை அடைந்தார். அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை அடைந்து அம்மனை வேண்டினார்.இடைவிடாது தாயை வணங்கிக் கொண்டேயிருந்தார். அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்கண்டார். வாய் பேசா ஊமையானார்.
ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு யாவற்றையும் உணர்ந்தார். அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று-
கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார். தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். இது அவரின் தினசரி வாடிக்கையானது.
முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு( தற்போதைய பிள்ளைத் தோட்டம் ) வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக் கொண்டு தங்கினார். மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய
சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார். தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.
அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை தினமும் இரு வேளையும் வழிபட செல்ல
சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது. பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின் மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார்.காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது.தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார்.
அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்றுஅழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது.
அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.
விநாயகர் என்றதும் யானைத்தலை, பானை வயிறு இந்த இரண்டும்தான் நமக்கு நினைவுக்கு வரும். நன்கு உன்னிப்பாக பார்த்தால் யானைக்கு இருப்பது போன்று சிறிய கண்கள், விசிறி போன்று காது, ஒடிந்த நிலையில் ஒரு தந்தம், திறனை வெளிப்படுத்தும் துதிக்கை, கொஞ்சமாக பேச வேண்டும் என்பதை உணர்த்தும் சிறிய வாய் போன்றவற்றை பார்க்கலாம்.
ஆனால் மணக்குள விநாயகருக்கு தொப்பை கிடையாது. அவரது உருவமும் மற்ற விநாயகர் சிலை அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுபற்றி ஆலய குருக்கள் கூறியதாவது:-
மணக்குள விநாயகர் சிலை எத்தனையோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் உருவ அமைப்பு எங்களுக்கே ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மிக அருகில் இருந்து நுட்பமாக பார்த்தால்தான் அந்த வித்தியாசம் தெரியும். அந்த விநாயகரின் வடிவம் தொன்மைக் காலச் சிற்பக் கலை நுணுக்கத்தோடு உள்ளது. விநாயகர் உடல் மெலிந்த உடல்வாகு போன்றிருக்கும்.
தன் இரண்டு கால்களையும் மடக்கிச் சப்பணம் போட்டு அமர்ந்த கோலத்தில் அவர் உள்ளார். இத்தகைய உருவ அமைப்பில் உலகில் வேறு எங்கும் விநாயகர் சிலை இல்லை. இவ்வாறு கணேஷ் குருக்கள் கூறினார்.
இவர் குறிப்பிடும் விநாயகர் தற்போது ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் கருவறையில் இருந்து பெயர்த்து படகில் எடுத்துச் சென்று கடலில் தூக்கி வீசினார்கள்.
ஆனால் அவர்கள் கரைத்த திரும்புவதற்குள் இவர் கரை திரும்பி இருந்த இடத்துக்கே வந்து விட்டார்.
வெள்ளைக்காரர்களின் கை, இவர் மீது பட்டதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாக நீண்ட நாட்களாக பக்தர்களும், சமயப் பெரியவர்களும் கூறி வந்தனர். அதற்கான பரிகாரங் கள் செய்யப்பட்டாலும் அந்த விநாயகரை மீண்டும் வெள்ளைக்காரர்கள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம் புதுச்சேரி மக்களிடம் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில்தான் தொள்ளைக் காது சித்தர் ஜீவசமாதி ஆனார். அவரது உடல் மணல் குளத்தின் மேற்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதும் விநாயகர் கோவில் வழிபாடுகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெற தொடங்கின. அப்போது ஆகம விதிப்படி வெளிநாட்டவர் கைபட்ட சிலை தீட்டுப்பட்டது என்றும் எனவே வேறொரு புதிய விநாயகர் சிலையை கருவறையில் ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்றும் சமயச் சான்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து வழிபாட்டுக்கு எந்த வகையிலும் ஊறு நேராத வண்ணம் மற்றொரு விநாயகர் சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்ததாக கருதப்படுகிறது. அன்று முதல் ஆலய கருவறையில் இரண்டு விநாயகர்கள் உள்ளார்கள். பிரெஞ்சுக்காரர்களால் கடத்தப்பட்டு மீண்டு வந்த விநாயகர் ஆதி விநாயகர் என்றும், புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட விநாயகர் மூல விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
கருவறையில் உள்ள இந்த இரு விநாயகர்களுக்கும் ஒரே மாதிரி அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது.