Showing posts with label சித்தர் பாடல்கள். Show all posts
Showing posts with label சித்தர் பாடல்கள். Show all posts

கந்தர்சரணப்பத்து

வள்ளலார்

வள்ளலார் அருளிய முத்தான பத்து பாடல்கள்.

கந்தர்சரணப்பத்து

1) அருளா ரமுதே சரணம் சரணம்
அழகா வமலா சரணம் சரணம்
பொருளா வெனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில் வாகனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

அருள் நிறைந்த அமுதமே,
அழகனே, மலமில்லாத தூயனே,
என்னையும் பொருளாக மதித்து ஆள்கின்ற புனிதனே, பொன்னும்மணியும் போன்றவனே, மருட்சி யுடையார் நினைத்தற் கரியவனே, மயிலை வாஹனமாக உடையவனே, கருணைக்குச் சிறந்த இடமானவனே, கந்தனே, உன் திருவடியே எனக்குக் கதியாகும்.

2) பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணே ரொளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணே ருயிரே உணர்வே சரணம்
உருவே யருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

இசை பொருந்திய மறையை ஓதுவதால் விளையும் பயனே, பதிப் பொருளே, பரம்பொருளே, விண்ணிடத்து விளங்கும் ஒளிப் பொருளே, அதனின் மேலாய வெளியே, அவ்வெளியின் விளைவாகிய பொருளே, உடற்குள் நிலவும் உயிராயவனே, உணர்வு வடிவாயவனே,
உருவமாயும் அருவமாயும் உள்ள பொருளே, எனக்கு உறவாகியவனே,
என் கண்ணே, கண்ணின் மணியே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலாம்.

3) முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவே லரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

முடியா முதற் பொருளே, முருகனே, குமரனே, வடிவேலேந்தும் அரசனே, மயிலேறும் மணிபோலும் பெருமானே, அடியவர்க் கெளியவனே, அரியவனே, பெரியவனே, விலக்கரிய கதியாகுபவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

4) பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவ சண்முகனே சரணம் சரணம்
காவேர் தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

மலராகவும் மணமாகவும் உள்ளவனே, பொருட் செல்வமும் அருட் செல்வமுமானவனே, தலைவனே, குகப் பெருமானே, ஞானாசிரியனே, ஞானச் செல்வமே, தேவனே, தெளிவின் வடிவாயவனே, சிவ சண்முகக் கடவுளே, கற்பகச் சோலைக்கு அழகுதரும் கற்ப தருவே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

5) நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுண் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

ஆடுகின்ற ஒப்பற்ற பெரிய மயிலை வாஹனமாக உடையவனே, நல்லவர்கள் பாராட்டும் வல்லமை யுடையவனே, தேகத்திற்கு வண்மையும் வாழ்க்கைக்குச் செல்வமும் தருபவனே, தேவர்கள் எய்துதற் கரியவனே, பெரிய வண்மையுடைய தோள்களை உடையவனே, ஒப்பற்ற பெரிய முதல்வனே, தெய்வமணியே, கந்தசாமிக் கடவுளே நின் திருவடி எனக்குப் புகலிடமாம்.

6) கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத்தவருக் கருள்வோய் சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவாகிய நல்லொளியே சரணம்
காலற் றெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

அழகிய குறமகளாகிய வள்ளி நாயகியார் கணவனே, உயர் குலத்துப் பெரிய மாணிக்க மணியே, சீலமுடைய பெரியோர்க்குஅருள் செய்பவனே, சிவபெருமான் மகனே, நிலத்தில் வாழும் மக்களின் துன்பத்தைப் போக்குபவனே, நீதி வடிவாகிய நல்ல ஒளிப் பொருளே, நமன் போந்து செய்யும் துன்பத்தை நீக்குபவனே, கந்தசாமிக் கடவுளே, உன்திருவடியே எனக்குப்புகலிடமாம்.

7) நங்கட் கினியாய் சரணம் சரணம்
நந்தா வுயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவை தந்தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகநன் றருள்வோய் சரணம்
சுரர் வாழ்த்திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

எங்களுக்கு இனியவனே, குன்றாத வுயர்வுடைய சம்பந்தப் பெருமானே, பிறைத் திங்களைச் சூடிய சடையையுடைய சிவபெருமான் மகனே, பார்வதி தந்தருளிய நற் புதல்வனே, உயரிய இன்ப வாழ்வை மிக நல்குபவனே, தேவர்கள் வாழ்த்தி மகிழும் எங்கள் தலைவனே, கங்கை மடியிலேந்தி வளர்த்த குழந்தையே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

8)ஒளியுள் ளொளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

ஒளிக்கு ஒளி நல்கும் காரணப் பொருளே, ஒன்றாயும் பலவாயும் தோன்றும் பரம்பொருளே, தெளிவுடையார்க்கும் தெளி வளிக்கும் தெளிபொருளே, சிவமே, சிவப் பேற்றுக்குரிய தவமே, முற்றப் பழுத்த கனியே, அமிர்தமே, அறிவே, இன்பமே பொருந்த அருள்பவனே, கந்தசாமிக் கடவுளே உன் திருவடியே எனக்குப் புகலாகும்.

9) மன்னே யெனையாள் வரதா சரணம்
மதியே யடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம
்புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவே லரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

மன்னவனே, எனை ஆண்டருளும் வரதனே, இயற்கை யறிவு வடிவினனே, அடியேனது வாழ்வாயவனே, பொன் போன்றவனே, தூயனே, புகழ்ந்து ஏத்தும் அன்பர் மனத்தில் புகுந்திருப்பவனே, அன்னை போல்பவனே, கூரிய வேலேந்தும் வேந்தனே, ஆறுமுகப் பெருமானே, மலை போன்ற தோளை யுடையவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடி எனக்குப் புகலாம்.

10) வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமான் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவை யில்லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

வேதத்தின் பொருளாயவனே, தேவர்கட்குப் பெருமானே, ஞான வடிவினனே, அழகிய மயிலை வாகனமாக வுடையவனே, ஓசையின் ஒலி வடிவாகியவனே, குற்றமே யில்லாதவனே, செவியாற் கேட்டற் கினிமை தரும் புகழை யுடையவனே, கந்த சாமிக் கடவுளே உன் திருவடி எனக்குப் புகலிடமாம்.

பாம்பாட்டி சித்தர் பாடல்

 



1. தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடுபாம்பே! சிவன்

சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!

ஆடுபாம் பே! தெளிந்து ஆடுபாம் பே! சிவன்

அடியிணை கண்டோமென்று ஆடு பாம்பே!


2. நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே

நித்தியம்என் றேபெரிய முத்தியென்றே

பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே

பன்னிப்பன்னிப் பரவி நின்று ஆடுபாம்பே!


3. பொன்னில்ஒளி போலவெங்கும் பூரணமதாய்ப்

பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்

மன்னும் பலஉயிர்களில் மன்னிப் பொருந்தும்

வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே!


4. எள்ளில் எண்ணெய் போலவுயிர் எங்கும் நிறைந்த

ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே

உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே

ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே!


5. அண்டபிண்டம் தந்தஎங்கள் ஆதிதேவனை

அகலாம் லேநினைத்தே அன்புடன் பணிந்து

எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி மேத்தியே

ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!


6. சோதிமயமான பரி சுத்தவத்துவைத்

தொழுதழு தலற்றித் தொந் தோம்தோம் எனவே

நீதி தவறா வழியில் நின்று நிலையாய்

நினைந்து நினந்துருகி ஆடுபாம்பே!


7. அருவாயும் உருவாயும் அந்தி யாயும்

அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்

திருவாயும் குருவாயும் சீவனாயும்

செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!


8. சுட்டிகாட்ட ஒண்ணாதபாழ்ச் சூனியம் தன்னைச்

சூட்சமதியால் அறிந்து தோஷம் அறவே

எட்டிப் பிடித்தோ மென்றானந்த மாகப்பை!

எடுத்து விரித்துநின்று ஆடுபாம்பே!


9. எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்

இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்

அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற

ஆனந்த வெள்ளங்கண்டு ஆடு பாம்பே!


குரு வணக்கம்


10. காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே

தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்

போற்றிமனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்

புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடு பாம்பே!


11. பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்

புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்

மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்

மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே!


12. வேதப் பொருள் இன்னதென்றும் வேதம் கடந்த

மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்

போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்

பூரண சற்குருதாள் கண்டு ஆடுபாம்பே!


13. உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை

உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்

கள்ளமனந் தன்னைத் தள்ளிக் கண்டு கொண்டு அன்பாய்க்

களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே!


14. அங்கையிற் கண்ணாடிபோல ஆதி வத்துவை

அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்

சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே

தமனியப் படம் எடுத்து ஆடுபாம்பே!


15. காயம் நிலை அழிகையைக் கண்டு கொண்டு பின்

கற்பு நிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்

தூயநிலை கண்ட பரிசுத்தக் குருவின்

துணையடி தொழுது நின்று ஆடு பாம்பே!


16. கூடுவிட்டுக் கூடு பாயும் கொள்கை யுடைய

குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர்?

வீடு பெறும் வகையை மேன்மேலுங் காட்டும்

மெய்க் குருவைப் பணிந்து நின்று ஆடு பாம்பே!


17. அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்

அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்

வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்

மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே!


18. கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடும்

கடமழி யாது வாழுங் காரணக் குரு

பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து

பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே!


19. வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்

வல்லுடம்புக் கொருகுறை வாய்த்திடாது

மெச்சுகட முள்ள எங்கள் வேத குருவின்

மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே!


பாம்பினது சிறப்பு


20. நாதர்முடி மேல்இருக்கும் நாகப் பாம்பே!

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்லபாம்பே!

பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே!

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே!


21. வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே!

மண்டல மிட்டுடல் வளை வண்ணப் பாம்பே!

தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே!

தலையெடுத்தே நீ விளையாடு பாம்பே!


22. குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்;

கூறுந்திரு மாலினுக்குக் குடையுமானாய்:

கற்றைக் குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்:

கரவாமல் உளங்களித்து ஆடுபாம்பே!


23. மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்;

மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய்!

கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்:

கண்ணே செவியாகக் கொண்டாய் ஆடுபாம்பே!


24. சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்:

சங்கரனுக்கு ஆபரணந் தானு மாகினாய்:

மந்திரத்துக் கடங்கினாய் மண்டலமிட்டாய்:

வளைந்து வளைந்து நின்று ஆடுபாம்பே!


சித்தர் வல்லபம்


25. எட்டு நாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்

இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்

கட்டுக்கு அடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்

கடு விஷந் தனைக் கக்கி ஆடுபாம்பே!


26. ஆதிசேடன் ஆயினுமெம் மங்கையினாலே

ஆட்டி விடுவோ மெங்கள் ஆக்கினைக்குள்ளே;

நீதியோடு மடங்கியே நின்றிடச் செய்வோம்:

நின்ற நிலை தவறாமல் ஆடு பாம்பே!


27. தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்:

துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்:

ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் ஆகச் செய்குவோம்:

ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே!


28. எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிகுவோம்:

ஏழு கடலையுங் குடித்து ஏப்பமிடுவோம்:

மட்டுப் படா மணலையும் மதித்து விடுவோம்:

மகாராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!


29. மண்டலமுற்று மெங்கையால் மறைத்து விடுவோம்:

வானத்தையுமே வில்லாக வளைத்து விடுவோம்:

தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம்:

தோன்றலுக்கு முன்பு நீ நின்று ஆடு பாம்பே!


30.மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்:

முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்:

தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்:

தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!


31. செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்:

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்:

இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்:

எங்கள் வல்ல பங்கண்டு நீ ஆடு பாம்பே!


32. வேதன் செய்த சிருட்டிகள் போல் வேறு செய்குவோம்

வேதனையும் எங்கள்கீழே மேவச் செய்குவோம்:

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்:

நாங்கள் செய்கை யாம்இதுவென்று ஆடு பாம்பே!


33. அறுபத்து நாலு கலை யாவும் அறிந்தோம்:

அதற்குமேல் ஒரு கலையான தறிந்தோம்:

மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்:

மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே!


34. சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்:

வீறுபெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச் செய்குவோமென்று ஆடுபாம்பே!


35. வாசுகியை ஒரு பக்கம் மன்ன நிறுத்தி

மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே

தேசுலவு தக்கனைத்தன் திக்கினிற் சேர்த்துச்

செய்யபது மனைக்கொள்ளும் சித்தனாரே!


36. அனந்தனை யொருபக்கமாக நிறுத்தி

அதன் பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக்

கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங்

கடுஞ்சங்க பாலனைத்தான் சித்தனாரே!


37. அட்டதிக்குஞ் சக்கரங்களாகக் கீறி

அக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத்

திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்

சித்தந்தடு மாறாதீர் சித்தனாரே!


38. அட்டதிக்குஞ் சக்கரங்கள் அமைத்துவிட்டோம்!

அவ்வவற்றில் சக்கரங்கள் அமைத்து விட்டோம்:

எட்டுநாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம்:

இனியென்ன செய்வம் சொல்லும் சித்தனாரே!


39. நடுவாக ஆதிசேடன் தன்னை நாட்டும்

நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்:

கடுவிடங் கக்க வேயக் கட்செவிகளைக்

கையிலெடுத் தாடுங்கள் சித்தனாரே!


பொருளாசை விலக்கம்


40. நாடுநகர் வீடுமாடு நற்பொருள் எல்லாம்

நடுவன்வ ரும்பொழுது நாடி வருமோ?

கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னோ?

கூத்தன் பதங் குறித்துநின்று ஆடுபாம்பே!


41. யானை சேனை தேர்பரி யாவும் அணியாய்

யமன்வரும் போது துணையாமோ அறிவாய்:

ஞானஞ்சற்றும் இல்லாத நாய்கட் குப்புத்தி

நாடிவரும்படி நீ நின்று ஆடுபாம்பே!


42. மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்

மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள்

ஆணிப்பொன் முத்தாரம் அப்பொன் அந்தக் கடகம்

அழிவான பொருளெனநின்று ஆடுபாம்பே!


43. மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்

மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை

கூடவாரா வென்று அந்தக் கொள்கை அறிந்தோர்

குலவாமல் வெறுப்பாரென்று ஆடுபாம்பே!


44. மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்

மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ?

அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்

அழியார்என் றேநீ துணிந்து ஆடுபாம்பே!


45. பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்

பாழ்ச்சுடு காடதிலே பயனைப் பெறுமோ?

மஞ்சள்மணம் போய்ச் சுடுநாறு மணங்கள்

வருமென்று தெளிந்துநின்று ஆடுபாம்பே!


46. முக்கனியுஞ் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே!


47. வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்

வண்கவிதை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்

திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில்

சேரவர மாட்டாயென்று ஆடுபாம்பே!


48. மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்

மாளும்போது கூடஅவர் மாள்வ தில்லையே!

தக்கவுல கனைத்தையும் தந்த கர்த்தனைத்

தாவி த்தாவித் துதித்துநின்று ஆடுபாம்பே!


49. கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்

காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்:

மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்:

மெய்யன்பதம் நாடுவாரென்று ஆடுபாம்பே!


பெண்ணாசை விலக்கம்


50. வெயில்கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை

விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்

ஒயில்கண்டே இலவுகாத்து ஓடும் கிளிபோல்

உடல்போனால் ஓடுவாரென்று ஆடுபாம்பே!


51. செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்

சித்தப்பால் விழுங்கிய சீயென்று ஒறுத்தோம்:

குண்டுகட்டெ ருமையேறுங் கூற்றுப் பருந்தைக்

கொன்றுதின்று விட்டோம் நாம் என்று ஆடு பாம்பே!


52. வட்டமுலையென்றுமிக வற்றுந் தோலை

மகமேரு என்று உவமை வைத்துக் கூறுவார்

கெட்ட நாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தார்

கெடுவர் என் றேநீர் துணிந்து ஆடுபாம்பே!


53. மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக

வருணித்துச் சொல்வார்மதி வன்மை இல்லாதார்:

குருநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்

கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே!


54. சிக்குநாறுங் கூந்தலையே செழுமை மேகமாய்ச்

செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்

நெக்குநெக்கு உருகிப்பெண்ணை நெஞ்சில் நினைப்பார்

நிமலனை நினையார் என்று ஆடுபாம்பே!


55. நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்

நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழ்என்றும்

கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்கள்:

கோன் நிலையை அறியார் என்று ஆடுபாம்பே!


56. மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம்என்றும்

மானேயென்றும் தேனேயென்றும் வான் அமுதென்றும்

ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்

ஓதாமற் கடிந்துவிட்டு ஆடுபாம்பே!


57.மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக்கம் என்றும்

மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகையென்றும்

கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண்டு என்றும்

கழறாமல் கடிந்தோம்என்று ஆடுபாம்பே!


58. பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்

பூந்திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும்

கோவையென்றுங் கோதையென்றுங் கோகிலம் என்றும்

கூறாமல்து றந்தோம்நாம் என்று ஆடுபாம்பே!


59. மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்

மல்கும்புழுக் கூட்டின் மேல் வண்ணத் தோல் என்றும்

சலக்குழிக் குள்ளே நாற்றஞ் சார்ந்த சேறென்றும்

தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடு பாம்பே!


சரீரத்தின் குணம்


60. ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப்பு னலினிலே உண்டை சேர்த்தே

வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்

வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே!


61. இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண

ஈரைந்து மாதமாய் வைத்த சூளை

அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை

அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!


62. பரியாசம் போலவே கடித்த பாம்பு

பலபேர் அறியவே மெத்த வீங்கிப்

பரியாரம் ஒருமாது பார்த்த போது

பையோடே கழன்றதென்று ஆடுபாம்பே!


63. சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமும்

சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடம் அது உடைந்தால்

நாயும்நரி யும்பெரிய பேயுங் கழுகும்

நமதென்றே தின் றிடும்என்று ஆடுபாம்பே!


64. நீரில்எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல

நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே

பாரிற்பல உயிர்களைப் படைத்த வன்தனைப்

பற்றவேநீ பற்றித் தொடர்ந்து ஆடுபாம்பே!


65. நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்

நாளுங் கழுவினும் அதன் நாற்றம் போமோ?

கூறும் உடல் பலநதி யாடிக் கொண்டதால்

கொண்டமலம் நீங்காதென்று ஆடுபாம்பே!


66. காய்த்த மரம் அதுமிக்க கல்லடி படும்:

கன்ம வினை கொண்ட காயம் கண்டனை பெறும்:

வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே

வத்துத் திருவடி தொழுது ஆடுபாம்பே!


67. பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி

பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சே!

ஈசன்நிலை அறியாருக்கு இந்தத் துருத்தி

எரிமண்ணிற்கு இரையாம் என்று ஆடுபாம்பே!


68. மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து

வளமான சீவன் என்னுஞ் சூத்திரம் மாட்டித்

திரைக்குள் இருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே

தேகம்விழும் என்று தெளிந்து ஆடுபாம்பே!


69. தசநாடி தசவாயு சத்த தாது

சார்ந்தமரக் கப்பல் அது தத்தி விழுமே

இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்

எந்நாளும் ஒட்டத் துணிந்து ஆடுபாம்பே!


அகப்பற்று நீக்கல்


70. தாமரையின் இலையிலே தண்ணீர் தங்காத

தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்

தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத்

தொழுது தொழுது தொழுது ஆடும்பாம்பே!


71. கள்ளங்கொலை காமமாதி கண்டித்த வெல்லாம்

கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து

தெள்ளிதான வெட்டவெளி சிற்சொரூபத்தைத்

தேர்ந்து பார்த்துச் சிந்தை தெளிந்து ஆடுபாம்பே!


72. சொல்லும்புளி யம்பழத்தின் தோடு போலவே

சுற்றத்திருந்தாலும் அவர் தொநதங்கள் அற்று

நில்லுமனமே நீபர நின்மலத்திலே

நின்றுணைதான் வெறும் பாழென்று ஆடுபாம்பே!


73. சேற்றில்திரி பிள்ளைபூச்சி சேற்றை நீக்கல்போல்

தேசத்தோடு ஒத்துவாழ்வார் செய்கை கண்டபின்

சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே

தானடக்க வேணுமென்று ஆடுபாம்பே!


74. எண்ணெய்க்குந் தண்ணீர்க்குந் தொந்தம் இல்லாவாறுபோல்

எப்போதும் இப்புவியில் எய்த வேண்டும்:

கண்ணுக்குக் கண்ணானவொளி கண்டு கொள்ளவே

கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடுபாம்பே!


75. கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்

கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே

சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்

சீர்பாதங் காணத்தெளிந்து ஆடுபாம்பே!


76. கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்

கூர்கொள்யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டோங்காண்:

தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளைச்

சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே!


77. நித்தியமென்னு மலையில்நின்று கொண்டோம்யாம்:

நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்:

சத்தியமாய் எங்கள் கடந்தான் அழியாதே

சந்ததமும் வாழ்வோம் என்று ஆடுபாம்பே!


78. மனமென்னும் குதிரையை வாகன மாக்கி

மதியென்னும் கடிவாளம் வாயினில் பூட்டிச்

சினமென்னும் சீனியின் மேற்சீராய் ஏறித்

தெளிவிடம் சாரிவிட்டு ஆடு பாம்பே!


79. ஆசையென்னுஞ் செருப்பின் மேல் அடியை வைத்தே

ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே

காசையெனுந் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்திக்

காலாகாலங் கடந்தோம் என்று ஆடு பாம்பே!


80. காலன் எனுங் கொடிதான கடும்ப கையைநாம்

கற்பமெனும் வாளினாலே கடிந்துவிட்டோம்:

தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்

தற்பரங் கண்டோம் என்று ஆடு பாம்பே!


81. தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து

திகையாமல் சிற்சொரூப தெரிச னைக்கண்டு

வானிற் பறந்திடச்சூத வான்ம னிதீர்ந்து

வாயிற் போட்டேக நீ நின்று ஆடு பாம்பே!


82. தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியுங் கண்டேன்:

சுத்த வெளிக்குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்:

தாக்கிய சிரசின் மேல் தைத்த பாதம்

சற்குருவின் பாதம் என்று ஆடு பாம்பே!


83. ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே!

அரசடிப் பொந்தினிலே புகுந்து கொண்டாய்:

வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து

வாங்கியே தூங்கிநின்று ஆடு பாம்பே!


84. நாலு தெருவினிலே நாலு கம்பம்

நடுத்தெருவினிலேயோர் பொன்னுக் கம்பம்

போலும் விளங்குபொன்னுக் கம்பத்தினுக்கே

பூமாலை சூடியேநின்று ஆடு பாம்பே!


85. ஆழிபெயர்ந்தாலும் மேரு மட்டே அலையும்

அடியோடு பெயர்ந்தாலும் அன்றிக் கால

ஊழிபெயர்ந்தாலும் மதி உண்மைப் படிக்கே

உறுதி பெயராது நின்று ஆடு பாம்பே!


86. வாயுவினை இரையாக வாங்கி உண்டே

வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே

தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில்

திகைப்புறச் சேர்ந்துநின்று ஆடு பாம்பே!


87. மாசில்கதி வளையிலே மண்டலம் இட்டே

மதியான பெரும்பட மடலை விரித்தே

ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை

அடுத்தடுத்தே துதித்து ஆடு பாம்பே!


88. காடுமலை நதிபதி காசி முதலாய்க்

கால்கடுக்க  ஓடிற்பலன் காண லாகுமோ?

வீடுபெறும் வழிநிலை மேவிக் கொள்ளவே

வேதாந்தத் துறையில் நின்று ஆடு பாம்பே!


89. எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி

எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே

கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்

கண்டு தொழுதே களித்து ஆடு பாம்பே!


90. சூரியனைக் கண்டபனி தூர ஓடல் போல்

சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்

ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்

அகலாமல் பற்றித் தொடர்ந்து ஆடு பாம்பே!


91. காந்தம்வலி இரும்பு போல் காசில் மனத்தைக்

காட்சியான வத்துவுடன் கலக்கச் சேர்த்துச்

சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்

சலியாமல் தொடர்ந்து நின்று ஆடு பாம்பே!


92. உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?

உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி?

புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ? அஞ்ஞானம்

போகாது மூடருக்கென்று ஆடு பாம்பே!


93. திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி

சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்

அருளான மூலகுரு ஐயர் செயலால்

ஆனந்தங் கண்டோம் என்று ஆடுபாம்பே!


94. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்

எண்திசை திரிந்துங் கதி எய்தல் இலையே!

நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே

நாதன்பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே!


95. தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்:

தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்:

பின்னை யொரு கடவுளைப் பேண நினையார்

பேரொளியைப் பேணுவார் என்று ஆடு பாம்பே!


96. பாலிற்சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியைப்

பற்றுப்பொன் பற்றவைத்த பான்மைபோலே

காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு

களித்துக் களித்துநின்று ஆடுபாம்பே!


97. தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்

தேகபந்தம் கொண்டனம் இத் தேச வாழ்வினை

ஒக்காளமென்று எண்ணிமிகு ஓகையுடன் நீ

உள்ளம் தெளிந்துநின்று ஆடு பாம்பே!


98. சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம்வித மானவான வேறு நூல்களும்

வீணாண நூல்களே என்று ஆடு பாம்பே!


99. சமயபேதம் பலவான சாதி பேதங்கள்

சகத்தோர்க்கே அல்லாதுசற் சாதுக் களுக்கோ?

சிமயத்தி லேறினபேர் சித்தம் மாறுமோ?

சித்தர்சித் தாந்தந்தேர்ந்து ஆடுபாம்பே?


100. பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ?

பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?

ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை

அடையலாம் என்று துணிந்து ஆடு பாம்பே!


101. மூலவேர் அறிந்து கொண்டால் மூன்று உலகமும்

முன்பாகவே கண்டுநித்ய முத்தி சேரலாம்:

சாலவேர் அறிந்ததாலே தான்பயன் உண்டோ?

சகத்தைப்பொய் யென்று தெளிந்து ஆடு பாம்பே!


102. சகத்தனாதி யென்றிடாது தான் அனாதியார்:

சமைந்ததென் றுஉரைப்பார்கள் சத்தை அறியார்:

மகத்துவ நிலைகற்பவன்மை யல்லாது

மற்றும்வன்மை இல்லையேஎன்று ஆடு பாம்பே!


103. ஆயிரத்தெட் டிதழ்வீட்டில் அமர்ந்த சித்தன்

அண்டம்எல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்

காயமில்லாது ஓங்கிவளர் காரணச் சித்தன்

கண்ணுள்ஒளி யாயினான் என்று ஆடு பாம்பே!


104. நாற்பத்துமுக் கோணநிலை நாப்ப ணதாக

நாடும் அக்க ரச்சொரூப நாய கன் தனை

மேற்படுத்திக் கொண்டால் அந்த மேலு லகெலாம்

மெல்லடிக்குத் தொண்டேயாம் என்று ஆடு பாம்பே!


105. கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே:

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே!

கொண்ட கோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார்:

கூத்தாடிக்கூத் தாடியே நீ ஆடு பாம்பே!


106. ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன்

அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு?

வேறுபட்டால் அவன் தனை மீட்டல் அரிதே:

மேவிமுன் னேவிடாது கொண்டு ஆடு பாம்பே!


107. எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும்என்

ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணாவிடிலே?

பண்ணரிய தவப்பயன்பத்தி இல்லையேல்

பாழ்படும் என்று துணிந்து ஆடு பாம்பே!


108. எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயன்என்

எங்கள் ஆதி பாதாம்புயம் எண்ணாக் காலையில்?

இவ்வுலக வாழ்வுதானும் இன்றே அறுமென்று

எண்ணிக் கர்த்தன் அடிநினைந்து ஆடு பாம்பே!


109. மணக்கோலங் கொண்டுமிக மனம கிழிந்துமே

மக்கள் மனை கற்றத்தோடு மயங்கி நின்றாய்:

பிணக்கோலம் கண்டுபின்னுந் துறவா விட்டில்

பிறப்புக்கே துணையாம்என்று ஆடு பாம்பே!


110. பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்

பெருமருந்து ஒன்றுசொல்வேன் பெட்புடன் கேளாய்:

திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்

திறந்திடும் வகையறிந்து ஆடு பாம்பே!


111. இறந்தவர் ஐவர் அவர் இட்டமானவர்

எய்தும் அவர் இறந்தார் என்று எல்ல வர்க்குஞ்சொல்

மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர்

வகையறிந் திடவேநின்று ஆடு பாம்பே!


112. ஆகார முதலிலே பாம்ப தாக

ஆனந்த வயலிலே படம் விரித்தே

ஊகார முதலிலே யொத்து ஒடுங்கி

ஓடி வகாரத்தின் நாவைநீட்டிச்


சீகாரங் கிடந்ததோர் மந்திரத்தைச்

சித்தப் பிடாரனார் போதஞ் செய்ய

மாகாரப் பிறப்பையும் வேர் அறுத்து

மாயபந்தம் கடந்தோம் என்று ஆடு பாம்பே!


113. தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்:

தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்:

மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்

மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்:


அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி

அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே

இந்த மருந்தினைத் தின்பீராகில்

இனிப் பிறப்பு இல்லையென்று ஆடு பாம்பே!


114. களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே

கனமான பாய்மரங் காண நாட்டி

அளி புலந் தன்னையே சுக்கானாக்கி

அறிவென்னும் ஆதாரச் சீனி தூக்கி


வெளியென்னும் வட்டத்தே யுள்ளடக்கி

வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்

தெளிவுறு ஞானியார் ஒட்டுங் கப்பல்

சீர் பாதஞ் சேர்ந்தது என்று ஆடு பாம்பே!


115. உள்ளத்துக் குள்ளேயே உணர வேண்டும்:

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்:

மெள்ளக் கனலை எழுப்ப வேண்டும்

வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்:


கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்

கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று

தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்

சீர்பாதம் கண்டோம் என்று ஆடு பாம்பே!


116. ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்:

ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே

ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே


சாங்காலம் இல்லாமல் தாணு வோடே

சட்ட திட்டமாய்ச் சேர்ந்து சாந்தமாகத்

தூங்காமல் தூங்கியே சுகம் அடைந்து

தொந்தோம் தொந்தோம் என்று ஆடு பாம்பே!


117. விரகக் குடத்திலே பாம்படைப்போம்:

வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்:

கரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்:

காலக் கடுவெளி நின்று ஆட்டுவிப்போம்:


துரகந் தனிலேறித் தொல் உலகெங்கும்

சுற்றி வலம் வந்த நித்ய சூட்சங் காண்டும்;

உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்போம்:

ஒரு நான்கும் பெற்றோம் எனது ஆடு பாம்பே!


118. காயக் குடத்திலே நின்ற பாம்பைக்

கருணைக் கடலிலே தியங்க விட்டு

நேயச் கழுமுனை நீடு பாய்ச்சி

நித்யமான வத்துவை நிலைக்க நாடி


மாயப் பெருவெளி தன்னில் ஏறி

மாசற்ற பொருளினை வாய்க்கத்தேடி

ஆயத் துறைகடந் தப்பாற் பாழின்

ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!


119. மூலத் தலத்திலே நின்ற கருத்தை

முற்றுஞ் சுழுமுனை தன்னில் ஊடே

மேலத் தலத்திலே விந்து வட்டம்

வேலை வழியிலே மேவி வாழும்


பாலத் திருத்தாய்க் கருணை யதனால்

பரகதி ஞான சொரூபமாகி

ஆலச் சயனத்து மாலுடன் நின்றே

ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!


120. புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும்

புரவி யெனும் மனத்தை ஒருமைப் படுத்தி

மலபந்த வுலகங் கடந்ததாலே

மன்னுகுரு பாதத்தின் நிலையை நாடித்


தலம் ஐந்து பூலோகங் கடந்ததாலே

சந்திர மண்டிலமுங் கடந்த தாகும்:

அலமந்து பூலோகக் கடலை நீக்கி

ஆனந்த மாகிநின்று ஆடு பாம்பே!


121. குருவென்னும் ஆசானின் உருவெடுத்துக்

குறியான ஞானந்துப் பாக்கி யாக்கி

அருளென்னும் அருளையே உண்டையாக்கி

ஆனந்த மாகவே அதைக் கடந்தே


மருளென்னும் மாதர்மன நெறியைத்தொட்டு

வாங்காமல் எரிந்திட நெட்டை யிட்டுப்

பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே

பற்றானைப் பற்றிநின்று ஆடு பாம்பே!


122. கன்னான் குகையிலே கான்மறிப்போம்:

கருமான் உலையிலே தீயை மூட்டுவோம்:

சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம்:

சுருதி யருங்கலவி ஒப்பஞ் செய்வோம்:

மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம்:

மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம்:

பன்னாதே பன்னாதே சும்மா விருந்து

பராபரஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!


123. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்:

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்:

வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்:

வேண்டாத மனையினில் உறவு செய்வோம்:


சோதித் துலாவியே தூங்கி விடுவோம்

சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்:

ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்

அறியார்கள் இதையென்று ஆடு பாம்பே!


124. நெட்டெழுத்து அதனிலே நிலைபி டித்து

நீங்கர் எழுத்திலே வாலை முறுக்கி

விட்டுஅவ் எழுத்திலே படம்விரித்து

விண்ணின் வழியிலே மேவி யாடிப்


பட்ட எழுத்தையும் பதிந்தி ருப்போம்

பன்னிரண் டாமெழுத்தில் பன்னிக் கூடித்

திட்டமுடன் எமக்கருள் தேசிக னார் தம்

சீர்பாதஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!


125. ஊசித்துளைக் குடத்தினில் பாம்பை அடைப்போம்:

உலகெலாம் சுற்றியே உலாவி வருவோம்:

மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்:

மனமொத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்:


மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்:

மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம்:

பேசும் எழுத்தையும் விழுங்கி விடுவோம்:

பிறப்பு இறப்பு அற்றோம்என்று ஆடு பாம்பே!


126. ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்:

அக்கினிக் கோட்டைமேல் ஏறிப் பார்ப்போம்:

மாணிக்கத் தூணின்மேல் விட்டே ஆட்டுவோம்:

மனம்வாக்குக் காயத்தை இரைகொடுப்போம்:


நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்:

நமனற்ற நாதன் பதம் நாடியே நிற்போம்:

ஏணிப் படிவழிகண்டு ஏறி விடுவோம்:

யாரும்இதை அறியார்என்று ஆடு பாம்பே!


127. வடக்குங் கிழக்குமாக நூலை இழைப்போம்:

மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்:

நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம்:

நடவா வழியினிலே புடையை நெய்வோம்:

குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்:

கொய்ததை எங்குமே விற்று விடுவோம்:

அடக்கியே ஏகத்துள்ளே வைக்கவும் வல்லோம்:

ஆதிபதங் கண்டோம் என்று ஆடு பாம்பே!


128. சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்:

சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்:

பாத்திரங் கொண்டுமே பலிஇ ரப்போம்:

பத்தெட்டு மூன்று படிக டந்தோம்:

ஊத்தைச் சடத்தினைப் புடமே இடுவோம்:

உளவன் எமக்குநல் உறுதி சொல்லப்

பார்த்துரை இதன்மெய் பலிக்க எண்ணிப்

பதனம் பதனம்என்று ஆடு பாம்பே!


129. மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்:

மணிவட்ட வாசியை வாரி உண்போம்:

வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்:

வக்கிர சொப்பனந் தாண்டி விடுவோம்:

பவ்வ வெளியிலே விட்டே ஆட்டுவோம்:

பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்:

சிவ்வுரு வாகியே நின்றோம் என்றே

சீர்பாதம் கண்டுதெளிந்து ஆடு பாம்பே!

நடேசர் கும்மி

ஆனந்த பைரவி
ஆனந்த பைரவி

ஆதி தாளம்

பல்லவி:

கும்மியடி பெண்ணே கும்மியடி இரு
கொங்கை குலுங்கவே கும்மியடி

அனுபல்லவி

நம்மை யாளு பொன் னம்பல வாணனை
நாடிக் கும்மி யடியேடி பதம் பாடிக் கும்மி யடி யேடி!

சரணங்கள்:

1. காமம் அகற்றிய தூயனடி சிவ
காம சவுந்தரி நேயனடி!
மாமறை யோதுசெவ் வாயனடி மணி
மன்றெனு ஞானவா காயனடி!

2. ஆனந்தத் தாண்டவ ராசனடி நமை
ஆட்கொண் டருளிய தேசனடி!
வானந்த மாமலை மங்கைமகிழ் வடி
வாளன டிமண வாளனடி!

3. கல்லைக் கனிவிக்குஞ் சித்தனடி முடி
கங்கைக் கருளிய கர்த்தனடி!
தில்லைச் சிதம்பர சித்தனடி தேவ
சிங்கம டியுயர் தங்கமடி!

4.பெண்ணொரு பால் வைத்த மத்தனடி சிறு
பிள்ளைக் கறிகொண்ட பித்தனடி!
நண்ணி நமக்கருள் அத்தனடி மிக
நல்லனடி யெல்லாம் வல்லனடி!

5. அம்பலத் தாடல்செய் ஐயனடி - அன்பர்
அன்புக் கெளிவரு மெய்யனடி!
தும்பை முடிக்கணி தூயனடி! சுயச்
சோதிய டிபரஞ் சோதியடி!

சூரியானந்தர்




சூத்திரம்

1. சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற
தெட்சிணா மூர்த்தியுடைய பாதங் காப்பு:
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன் றுக்குள்
பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை யெல்லாம்
நீர்கொண்ட வூசரத்தின் மகிமை தன்னை
நிசமாகச் சொல்லாமல் மறந்து விட்டார்
ஆர்கொண்ட வேணியனா ருமக்குச் சொன்னார்
ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.

2. அறைந்திட்ட வகையேது வுப்பே ஆதி
ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்
மறைந்திட்ட வுப்பதுவே காரங் காரம்
மண்ணான வுப்பதுவே சாரஞ் சாரம்
கறைந்திட்ட வூசருக்குக் கேற்ற வுப்பைக்
காணாமற் போனதினாற் கலக்க மாச்சு
இறைந்திட்ட மலசலமாய்க் காணலாகும்
இந்தவிரண் டோரிடத்தி லிருக்கும் பாரே.

3. இருக்கின்ற வுப்பினுக்கு மூலா தாரம்
இந்துவொன் றிரவியொன்று வன்னி யொன்று
பெருக்கின்ற வீசனுக்குச் சூட்ச முந்தான்
பிருதிவியே தூலமெனப் பேச லாகும்
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம்
கருதையிலே யெழுதோற்றங் காண லாகும்
உருக்கொண்ட சீவசெந்தும் அனேக முண்டாம்
உற்றுப்பா ரண்டபிண்ட முண்மை தானே.

4. தானாக நின்றதுவே பாரு மாச்சு
சகலசித்துப் பிரகிருதி யுயிரு மாச்சு
வானாகி நின்றதுவே சாட்சி யாகும்
மன்னுயிரெல் லாஞ்சோதி மயமுமாச்சு
ஊனாகப் பிறந்தசடம் பிறவா முத்திக்
குதவியல்லோ பிரகிருதி யோனி யோனி
கோனாக நின்றகுரு வுபதே சத்தாற்
குருபுகுந்தே யுப்பெடுத்துக் கொள்ளுவாயே.

5. கொள்ளுவார் முப்பூவின் முதலா மங்கம்
கூர்ந்துபா ரூசரத்தைக் கொள்கிக் கொண்டு
விள்ளுவார் யோனியின் படிவி டாமல்
மேலேற்ற மேலுதவி மேவிற் றானால்
துள்ளுவா ரிந்துப்புச் சிவமு மாச்சு
துருசுப்புப் பணவிடையாற் றொந்த மேற்றித்
தள்ளுவார் பிரளயமோர் கோடி காலம்
சகலசித்தும் மூலவுப்புத் தன்னி லாச்சே.

6. ஆச்சப்பா மூலவுப்புக் கஞ்சு தீட்சை
ஆதியுப்புக் கப்படியே தீட்சை யாகும்?
மூச்சப்பா தசதீட்சை யார்தான் செய்வார்?
மூலகுரு செய்வார்பின் னார்தான் செய்தார்?
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம்
ஏற்றிவிட்டார் முப்பத்தி ரண்டா மென்று
பேச்சப்பா பேசினதி லாவ துண்டோ
பிண்டவுப்புக் கேழுவிதம் பேச லாமே.

7. பேசுகின்ற வுப்பினுக்கு மேலே அங்கம்
பெருமையுள்ள சித்தர்கள் தாம் செய்யும் மார்க்கம்
வீசுகின்ற சூதத்தின் துறைக ளெல்லாம்
மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சா னாலும்
பாசையினாற் சொன்னார்கள் வெளிதோன் றாது
பாலனுக்குந் தோன்றுமிந்த நூலை பார்த்தால்
கூசல்மிஞ்சிப் போடுதென்று என்றன் நூலைக்
குகைக்குள் மறைத் திட்டதனாற் கூறொண் ணாதே.

8. ஒண்ணான நூலாகு மிருநூற் றைந்தில்
ஓதிவைத்த கருத்தெரியு மிருபத் தைந்திற்
கண்ணாகு மிந்த நூல் பதின்மூன் றுக்குள்
கருவையொரு கற்பமுறை காட்டி வைத்தேன்
வண்ணானை யறியாத பேருக் கெல்லாம்
வாதியென்ற பேரேது வாத மேது?
பெண்ணாணின் சுரோணிதமும் விந்துங் கண்டால்
பேரான பூரணத்தின் பெருமை தானே.

9. பெருமையென்ற காயசித்தி பண்ணா விட்டாற்
பேரான அடியோடு முடியும் போச்சு
அருமையென்ற குண்டலிக்குள் வராகி பூசை
அப்பனே கண்டமதி லங்கெண் றூணு
புருவமையத் துள்ளேவும் மென்று கும்பி
போதமென்ற மவுன வித்தை கைக்குள் ளாச்சு
தருமவித்தை பிரகிருதி மூச்சா டாது
சகத்திரத்தெண் மலர்ப்பதத்திற் சார்ந்து நில்லே.

10. நில்லாத மூலிகையாற் காய சித்தி
நிட்டைமவு னத்தாலே யோக சித்தி
கொல்லாத மூலமதில் அபான சுத்தி
கூடாம லிருந்துவிட்டா லேது முத்தி?
சொல்லாத வீசனுப்பு மதிசூ தத்திற்
சூட்டினேன் வெள்ளை யென்ற சூடன் வித்தை
எல்லாரு மிருந்தவிதம் பாட மாட்டார்
இதமான சூதகத்தின் வெடியுப் பாச்சே.

11. உப்பான வெடியுப்புச் செயநீ ராலே
ஒருகோடி வித்தையெல்லா மாட லாகும்
அப்பான கல்லுப்பு நீரி னாலே
ஆடலாந் துருசினுடை அங்க மெல்லாம்
செப்பாத யோனிருது செந்நீர் மட்டாற்
சிவன் வேறு தானுண்டேயிவனல் லாமல்
தப்பாமற் செய்தென்ன சவுக்கா ரந்தான்
சட்டிமுதற் பவுரணையுந் தாக்கிப் பாரே.

12. தாக்கிப்பா ராகாசஞ் சருவ சாட்சி
சதாநித்தம் அந்தரமே சாடி நின்றால்
நோக்கிப்பார் வாயுலயப் படுவ தற்கு
நூதனமாய் வன்னியதிற் கூட வேணும்
மூக்கிற்றா னோடுவது பிராண வாயு
மூலமெனும் வளையமது நகாரந் தன்னைத்
தூக்கித்தான் விட்டவர்க்கு யோக மெய்தும்
சூரிய னந்தனிவை சொல்லும் நூலே.

13. சொல்வதென்ன ரேசகத்தை வெளிவி டாதே
துடியான பூரகத்தைப் பின்னி டாதே
வெல்வதென்ன கும்பகத்தை யடிவி டாதே
மேலேற்று மாத்திரையை மறந்தி டாதே
செல்வதென்ன கற்பத்தை மறந்தி டாதே
செந்தூரஞ் சேர்க்கையிலே சிதறி டாதே
கொல்வதென்ன அமூதயலேபிறக்கு மிந்தக்
குளிகைக்குச் சாரணைசெய் குணமு முற்றே.

1 எண்ணா யிரத்து லிருநூறு மந்திரம்
அண்ணார் சொன்னாரடியே னறிந்தேன்
சொன்னார் சிவப்புச் சோர்பச்சை ரூபம்
வண்ணா னறிவான் வகாரத் திரையமே

என்று திருமூலர் திருமந்திரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்


முத்தி தரும்வேத மொழியாம் புலம்பல்சொல்ல

அத்தி முகவன் தன் அருள்பெறுவதெக் காலம். 1

ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம். 2

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே யிருந்து

தேங்காக்கருணை வெள்ளந் தேக்குவது மெக்காலம். 3

தேங்காக் கருணைவெள்ளந் தேக்கியிருந் துண்பதற்கு

வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம். 4

ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல்

மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம். 5

மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக்

காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம். 6

காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு

மாயா அனுபூதி வந்தடுப்ப தெக்காலம். 7

சேயாச் சமைந்து செவிடூமை போற்றிரிந்து

பேய்போ லிருந்துன் பிரமை கொள்வ தெக்காலம். 8

பேய்போற் றிரிந்து பிணம் போற்கிடந்து பெண்ணைத்

தாய்போ னினைத்துத் தவமுடிப்ப தெக்காலம். 9

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகங்காட்டி

மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம். 10

பெண்ணினல்லா ராசைப் பிரமையினை விட்டொழிந்து

கண்ணிரண்டு மூடிக் கலந்திருப்ப தெக்காலம். 11

வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குல் பைதனிலே

தட்டுண்டு நிற்கை தவிர்வதுவு மெக்காலம். 12

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்

தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம். 13

தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே

சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம். 14

மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு ழலாமல்

தன்னுயிர்போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். 15

பாவியென்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்

ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம். 16

உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்

புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம். 17

வேடிக்கையுஞ் சொகுசும் மெய்ப்பக்கட்டும் பொய்ப்பகட்டும்

வாடிக்கை யெல்லாம் மறந்திருப்ப தெக்காலம். 18

பட்டுடையும் பொற்பணியும் பாவனையுந் தீவினையும்

விட்டுவிட்டுன் பாதம் விரும்புவது மெக்காலம். 19

ஆமை வருமாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம். 20

தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங்

கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம். 21

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்

செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம். 22

ஒழிந்தகருத் தினைவைத் துள்ளெழும்புவெள் ளெலும்பாய்க்

கழிந்தபிணம் போலிருந்து காண்பதினி யெக்காலம். 23

அற்ப சுகமறந்தே அறிவையறி வாலறிந்து

கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்ப தெக்காலம். 24

கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்

உருப்படுத்தி யாள உடன்படுவ தெக்காலம். 25

தூண்டு விளக்கணையத் தொடர்ந்திருள் முன்சூழ்ந்தாற்போல்

மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம். 26

தூரியினில் மீன்போற் சுழன்று மனம்வாடாமல்

ஆரியனைத் தேடி அடிபணிவ தெக்காலம். 27

எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீடுபெற

வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம். 28

அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற்

சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். 29

அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன்

தொண்டருக்குத் தொண்டனென தொண்டுசெய்வ தெக்காலம். 30

பன்றி வடிவெடுத்துப் பாரிடந்து மால்காணாக்

குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்காலம். 31

தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத் துட்பொருளை

முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம். 32

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே

ஏகாந்தமாக யிருப்பதினி யெக்காலம். 33

மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம். 34

இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே

மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம். 35

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டே வாடாமற்

பஞ்சாமிர்தத்தைப் பருகுவது மெக்காலம். 36

செஞ்சலத்தி னாற்றிரண்ட ஜெனனமோக்ஷம் பெறவே

சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம். 37

கும்பிக் கிரைத்தேடிக் கொடுப்பா ரிடந்தோறும்

வெம்பித் திரிகை விடுப்பதினி யெக்காலம். 38

ஆடுகின்ற சூத்திரந்தான் அறுமளவுமே திரிந்து

போடுன்றநாள்வருமுன் போற்றுவது மெக்காலம். 39

நவசூத் திரவீட்டை நானென் றலையாமல்

சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம். 40

மறந்து மலசலங்கள் மாய்ப்புழுக் கூட்டைவிட்டுக்

கரந்துன் அடியினைக் கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம். 41

இம்மை தனிற்பாதகனாய் இருவினைக்கீ டாயெடுத்த

பொம்மை தனைப்போட்டுன்னைப் போற்றி நிற்ப தெக்காலம். 42

உப்பிட்ட பாண்டம் உடைந்துகருக் கொள்ளுமுன்னே

அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம். 44

சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு

பாதைதனைக் கழித்துப் பயனடைவ தெக்காலம். 45

காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டதுபோல்

பாண்டத்தை நீக்கிப் பரமடைவ தெக்காலம். 46

சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல்

ஊத்தைச் சடம்போட் டுனையடைவ தெக்காலம். 47

தொடக்கைச் சதமெனவே சுமந்தலைந்து வாடாமல்

உடக்கைக் கழற்றி உனையறிவ தெக்காலம். 48

ஆசைவலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்

ஓசைமணி தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம். 49

கூறறிய நால்வேதங் கூப்பிட்டுங் காணாத

பார ரகசியத்தைப் பார்த்திருப்ப தெக்காலம். 50

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்

எல்லாப் பிறப்பி னிருளகல்வ தெக்காலம். 51

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்

பக்குவம் வந்துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். 52

பருவத் தலைவரொடும் புல்கியின்பங் கொள்வதற்குத்

தெரிவைப் பருவம் வந்து சிக்குவது மெக்காலம். 53

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்ட மெல்லாமறிந்து

குருவையறிந்தே நினைத்துக் கும்பிடுவ தெக்காலம். 54

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி

யம்பழமும் ஓடும்போ லாவதினி யெக்காலம். 55

பற்றற்று நீரிற் படர்தாமரை யிலைபோல்

சுற்றத்தை நீங்கிமனந் தூரநிற்ப தெக்காலம். 56

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்

சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி யெக்காலம். 57

மருவும் அயற்புருடன் வருநேரங் காணாமல்

உருகுமனம் போலெனுள்ளம் உருகுவது மெக்காலம். 58

தன்கணவன் தன்சுகத்திற் தன்மனம் வேறானதுபோல்

என்கருத்தி லுன்பதத்தை ஏற்றுவது மெக்காலம். 59

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்

தேடித் தவிப்பவன்போல் சிந்தைவைப்ப தெக்காலம். 60

எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்

கவ்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம். 61

கண்ணா லருவி கசிந்துமுத்துப் போலுதிரச்

சொன்னபரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம். 62

ஆக மிகவுருக வன்புருக யென்புருகப்

போக வநுபூதி பொருந்துவது மெக்காலம். 63

நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்

பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம். 64

அன்பை யுருக்கி அறிவையதன் மேற்புகட்டித்

துன்பவலைப் பாசத் தொடக்கறுப்ப தெக்காலம். 65

கருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல்

அருவி விழிசொரிய அன்புவைப்ப தெக்காலம். 66

தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்

பொரியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம். 67

ஆதார மூலத் தடியில் கணபதியைப்

பாதார விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம். 68

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்

கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்ப தெக்காலம். 69

அப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை

உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவதெக்காலம். 70

மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில்

தோன்றும் உருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்காலம். 71

வாயுவறு கோணமதில் வாழும் மகேச்சுரனைத்

தோயும்வகை கேட்கத் தொடங்குவது மெக்காலம். 72

வட்டவழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக்

கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம். 73

உச்சிக் கிடைநடுவே ஓங்கும் குருபதத்தை

நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம். 74

பாராகிப் பார்மீதிற் பஞ்சவர்ணந்தானாகி

வேறாகி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம். 75

கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ்

சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவது மெக்காலம். 76

கள்ளக் கருத்தை யெல்லாங் கட்டோடு வேரறுத்திங்

குள்ளக் கருத்தை உணர்ந்திருப்ப தெக்காலம். 77

அட்டகாசஞ் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே

பட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம். 78

அறிவுக் கருவியுட னவத்தைப்படும் பாட்டை யெல்லாம்

பிரியமுடன் நிருத்திப் பெலப்படுவ தெக்காலம். 79

பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்

பேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம். 80

தோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றாமல்

ஊன்றாசை வேரையடி யூடறுப்ப தெக்காலம். 81

புன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகிலினி

யென்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம். 82

நட்ட நடுவினின்று நற்றிரோ தாயியருள்

கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம். 83

நானேநா னென்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி

தானே வெளிப்படுத்தித் தருவனென்ப தெக்காலம். 84

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே

தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி யெக்காலம். 85

ஐந்து பொறிவழிபோய் அலைத்துமிந்தப் பாழ்மனதை

வெந்து விழப்பார்த்து விழிப்பதினி யெக்காலம். 86

இனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்வோருந் தான்மாண்டு

சினமாண்டு போகவருள் சேர்ந்திருப்ப தெக்காலம். 87

அமையா மனதமையும் ஆனந்த வீடுகண்டங்

கிமையாமல் நோக்கி யிருப்பதினி யெக்காலம். 88

கூண்டுவிழுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்

மாண்டுவிழு முன்னேநான் மாண்டிருப்ப தெக்காலம். 89

ஊனிறைந்த காயமுயிரிழந்து போகுமுன்னம்

நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம். 90

கெட்டு விடுமாந்தர் கெர்விதங்கள் பேசிவந்த

சுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம். 91

தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்

நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம். 92

வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்

தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம். 93

காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல்

வாசி தனிலேறி வருவதினி யெக்காலம். 94

ஒலிபடருங் குண்டலியை உன்னியுணர் வாலெழுப்பிச்

சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவது மெக்காலம். 95

இடைபிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில்

தடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம். 96

மூல நெருப்பைவிட்டு மூட்டிநிலா மண்டபத்தில்

பாலைஇறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம். 97

ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவிசெல்ல

ஏக வெளியி லிருப்பதினி யெக்காலம். 98

பஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட்டாப் பொருளில்

சஞ்சரித்து வாழ்ந்து தவம்பெறுவ தெக்காலம். 99

மலமுஞ் சலமுமற்று மாயையற்றுமானமற்று

நலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம். 100

ஓடாமலோடி உலகைவலம் வந்து சுற்றித்

தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம். 101

அஞ்ஞானம் விட்டே அருண்ஞானத் தெல்லைதொட்டு

மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம். 102

வெல்லும் மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று

சொல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது மெக்காலம். 103

மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி

நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம். 104

எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல்

கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்காலம். 105

என்னை அறிந்து கொண்டே எங்கோமா னோடிருக்கும்

தன்மை அறிந்து சமைந்திருப்ப தெக்காலம். 106

ஆறாதா ரங்கடந்த ஆனந்தப் பேரொளியை

வேறாகக் கண்டுநான் பெற்றிருப்ப தெக்காலம். 107

ஆணவ மாயத்தா லழிந்துடலம் போகாமுன்

காணுதலா லின்ப முற்றுக்கண்டறிவ தெக்காலம். 108

மும்முலமுஞ் சேர்த்து முளைத்தெழுந்த காயமிதை

நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கியிருப்ப தெக்காலம். 109

முன்னை வினைகெடவே மூன்றுவகை காட்சியினால்

உன்னை வெளிப்படுத்தி உறுவதினி யெக்காலம். 110

கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும்

விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம். 111

கனவுகண்டாற் போலெனக்குக் காட்டிமறைத் தேயிருக்க

நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது மெக்காலம். 112

ஆரென்று கேட்டதுவும் அறிவுவந்து கண்டதுவும்

பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம். 113

நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை

முனைக்கு மேற்கண்டுகண்ணில் முளைந்தெழுப்ப தெக்காலம். 114

முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய்

அப்பாழும் பாழா அன்புசெய்வ தெக்காலம். 115

சீயென் றெழுந்து தெளிந்த நின்றவான் பொருளை

நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம். 116

வவ்வெழுத்து மவ்வெழுத்தும் வாளாகுஞ் சிவ்வெழுத்தும்

யவ்வெழுத்தினுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம். 117

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே

அழுத்தமாய்ச் சிந்தைவைத் தன்புகொள்வ தெக்காலம். 118

அருவாய் உருவாகி ஆதியந்த மாகிநின்ற

குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம். 119

நானென் றறிந்தவனை நானறியாக் காலமெல்லாந்

தானென்று நீயிருந்த தனையறிவ தெக்காலம். 120

என்மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணிஎண்ணிப் பார்த்தபின்பு

தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்ப தெக்காலம். 121

ஒளியி லொளியாம் உருப்பிறந்த வாறது போல்

வெளியில் வெளியான விதமறிவ தெக்காலம். 122

ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வழியிலேயடைத்து

வெளியிட்டுச்சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம். 123

காந்தம் வலித்திரும்பை கரத்திழுத்துக் கொண்டதுபோல்

பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில் வைப்ப தெக்காலம். 124

பித்தாயங்கொண்டு பிரணவத்தை யூடறுத்துச்

செத்தாரைப்போலே திரிவதினி யெக்காலம். 125

ஒழிந்தகருத்தினை வைத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்

கழிந்தபிணம்போலிருந்து காண்பதினி யெக்காலம். 126

ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே

சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம். 127

சூதுங் களவுந் தொடர்வினையுஞ் சுட்டிடக்காற்

றூதுந் துருத்தியைப் போட்டுனையடைவ தெக்காலம். 128

ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்

ஓசை மணித்தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம். 129

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்

புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதுமென்ப தெக்காலம். 130

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்

பக்குவமாய் உன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். 131

தூரோ டிசைந்து சுழன்றுவருந் தத்துவத்தை

வேரோ டிசைந்து விளங்குவது மெக்காலம். 132

பாக நடுவேறிப் பயந்தெழுந்த சித்திரத்தை

ஏசநடுமூலத் திருத்துவது மெக்காலம். 133

ஓரின்பங் காட்டும் உயர்ஞான வீதிசென்று

பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்ப தெக்காலம். 134

காரணமாய் வந்தென் கருத்தில் உரைத்ததெல்லாம்

பூரணமாகக் கண்டு புகழ்ந்திருப்ப தெக்காலம். 135

ஆயுங் கலைகளெல்லாம் ஆராய்ந்து பார்த்ததற்பின்

நீயென்று மில்லா நிசங்காண்ப தெக்காலம். 136

குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப்

பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம். 137

மத்தடுத்து நின்று மருளாடு வார்போல

பித்தடுத்து நின்னருளைப் பெற்றிருப்ப தெக்காலம். 138

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ்

வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம். 139

என்னை யறியாம லிருந்தாட்டுஞ் சூத்திரநின்

தன்னை யறிந்து தவம் பெறுவ தெக்காலம். 140

உள்ள மறியா தொளித்திருந்த நாயகனைக்

கள்ள மனந் தெளிந்து காண்பதினி யெக்காலம். 141

வாசித்துங் காணாமல் வாய்விட்டும் போசாமல்

பூசித்துந் தோன்றாப் பொருள் காண்ப தெக்காலம். 142

பன்னிரண்டு காற்புரவி பாய்ந்துசில்லந் தப்பாமல்

பின்னிரண்டு சங்கிலிக்குட் பிணிப்பதினி யெக்காலம். 143

நாட்டுக்கா லிரண்டும் விட்டு நடுவுக்கா லூடேபோய்

ஆட்டுக்கா லிரண்டினுள்ளே அமர்ந்திருப்ப தெக்காலம். 144

பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்

காற்பசுவை ஓட்டியதில் கட்டிவைப்ப தெக்காலம். 145

பலவிடத் தேமனதைப் பாயவிட்டுப் பாராமல்

நிலவரையி னூடேபோய் நேர்படுவ தெக்காலம். 146

காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே

ஓமக் கனல் வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம். 147

உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி

இதயத் திருநடன மினிகாண்ப தெக்காலம். 148

வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து

நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம். 149

பட்டமற்றுக் காற்றிற் பறந்தாடும் சூத்திரம்போல்

விட்டு வெளியாக விசுவசித்த லெக்காலம். 150

அட்டாங்க யோகமதற் கப்பாலுக் கப்பாலாய்

கிட்டாப் பொருளதனைக் கிட்டுவது மெக்காலம். 151

ஒட்டாம லொட்டிநிற்கும் உடலுமுயிரும் பிரித்தே

எட்டாப் பழம்பதிக்கிங் கேணிவைப்ப தெக்காலம். 152

பாசத்தை நீக்கிப் பசுவைப்பதியில் விட்டு

நேசத்தி னுள்ளே நினைந்திருப்ப தெக்காலம். 153

ஆசார நேய அனுட்டானமும் மறந்து

பேசா மெய்ஞ் ஞானநிலைப் பெற்றிருப்ப தெக்காலம். 154

பல்லாயி ரங்கோடிப் பகிரண்ட மும்படைப்பே

அல்லாது வேறில்லையென்று அறிவதினி யெக்காலம். 155

ஆதிமுத லாகிநின்ற அரியென்ற வட்சரத்தை

ஓதி யறிந்துள்ளே யுணர்வதினி யெக்காலம். 156

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்

சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம். 157

அல்லும் பகலுமென்றன் அறிவையறி வாலறிந்த

சொல்லும் முறைமறந்து தூங்குவது மெக்காலம். 158

இயங்குஞ் சராசரத்தில் எள்ளுமெண்ணெ யும்போல

முயங்குமந்த வேத முடிவறிவ தெக்காலம். 159

ஊனாகி யூனில் உயிராகி யெவ்வுலகுந்

தானாகி நின்ற தனையறியவ தெக்காலம். 160

என்னைவிட்டு நீங்காம என்னிடத்து நீயிருக்க

உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம். 161

இன்னதென்று சொல்லவொண்ணா எல்லையற்றவான் பொருளைச்

சொன்ன தென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம். 162

மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம். 163

என்னை இறக்கவெய்தே என்பதியை யீடழித்த

உன்னை வெளியில்வைத்தே ஒளித்துநிற்ப தெக்காலம். 164

கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்

நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெக்காலம். 165

நின்றநிலை பேராமல் நினைவிலொன்றும் சாராமல்

சென்றநிலை முத்தியென்று சேர்ந்தறிவ தெக்காலம். 166

பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை யுள்ளமைத்து

மின்னு மொளிவெளியே விட்டடைப்ப தெக்காலம். 167

கூட்டிலடைப் பட்டபுழு குளவியுருக் கொண்டதுபோல்

வீட்டிலடைப் பட்டருளை வேண்டுவது மெக்காலம். 168

கடலில் ஒளித்திருந்த கனலெழுந்து வந்தாற்போல்

உடலில் ஒளித்தசிவம் ஒளிசெய்வ தெக்காலம். 169

அருணப் பிரகாசம் அஇண்டமெங்கும் போர்த்ததுபோல்

கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம். 170

பொன்னிற் பலவிதமாம் பூரணமுண் டானாது போல்

உன்னிற் பிறந்ததுன்னில் ஒடுங்குவது மெக்காலம். 171

நாயிற் கடைப்பிறப்பாய் நான்பிறந்த துன்பமற

வேயிற் கனலொளிபோல் விளங்குவது மெக்காலம். 172

சூரிய காந்தியொளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்

ஆரியன் தோற்றத் தருள்பெறுவ தெக்காலம். 173

இரும்பிற் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்

கரும்பிற் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம். 174

கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தானினைக்க

உருக்கொண்டவாறதுபோல் உனையடைவ தெக்காலம். 175

வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்

கூடுவிட்டுப் பாயுங் குறிப்பறிவ தெக்காலம். 176

கடைந்த வெண்ணை மோரிற் கலவாத வாறதுபோல்

உடைந்து தமியேன் உனைக்காண்ப தெக்காலம். 177

இருளை ஒளிவிழுங்கி ஏகவுருக் கொண்டாற்போல்

அருளை விழுங்குமிருல் உகன்றுநிற்ப தெக்காலம். 178

மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்

என்னுள்நின்றது என்னுள்ளே யானறிவ தெக்காலம். 179

கண்ட புனற்குடத்திற் கதிரொளிகள் பாய்ந்தாற்போல்

கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம். 180

பூணுகின்ற பொன்னணிந்தாற் பொன்சுமக்குமோ வுடலை

காணுகின்ற என்கருத்திற் கண்டறிவ தெக்காலம். 181

செம்பிற் களிம்புபோற் சிவத்தை விழுங்குமிக

வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம். 182

ஆவியுங் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனைப்

பாவி யறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம். 183

ஊமைக் கனாக்கண் டுரைக்கறியா இன்பமதை

நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம். 184

சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்

போகா உடலகன்று போவதென்ப தெக்காலம். 185

நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு

வெட்ட வெளியில் விரவிநிற்ப தெக்காலம். 186

வெட்டவெளி தன்னில் விளைந்த வெம்பாதத்தை

திட்டமுடன் கண்டு தெளிவதினி யெக்காலம். 187

எங்கும் பரவடிவாய் என்வடிவு நின்வடிவாய்க்

கங்குல்பக லின்றியுனைக் கண்டிருப்ப தெக்காலம். 188

உண்டதுவும் மாதருடன் கூடிச் சேர்ந்தின்பங்

கண்டதுவு நீயெனவே கண்டு கொள்வ தெக்காலம். 189

ஈமென்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்

ஓமென்று சொன்னதுவும் உற்றறிவ தெக்காலம். 190

சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ்

சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம். 191

போக்கு வரவும் புறம்புள்ளு மாகிநின்றும்

தாக்கு மொரு பொருளைச் சந்திப்ப தெக்காலம். 192

நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்

நீயெனவே சிந்தைதனி நேற்படுவ தெக்காலம். 193

அறிவையறி வாலறிந்தே அறிவும் அறிவுதனில்

பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம். 194

நீடும் புவனமெல்லாம் நிறைந்துசிந் தூரமதாய்

ஆடும் திருக்கூத்தை அறிவதினி யெக்காலம். 195

தித்தியென்ற கூத்தும் திருச்சிலம்பி னோசைகளும்

பத்தியுடனே கேட்டுப் பணிவதினி யெக்காலம். 196

நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில்

சயனத் திருந்து தலைப்படுவ தெக்காலம். 197

அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்

திருவிளையா டற்கண்டு தெரிசிப்ப தெக்காலம். 198

மீனைமிக வுண்டு நக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்

தேனைமிக வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம். 199

பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே

கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம். 200

வெட்டவெளிக் குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்

கிட்டிவரத் தேடிக் கிருபை செய்வ தெக்காலம். 201

பேரறிவி லேமனதை பேசாம லேயிருத்தி

ஓரறிவி லென்னாளும் ஊன்றிநிற்ப தெக்காலம். 202

அத்துவிதம் போலுமென்றன் ஆத்துமத்தினுள்ளிருந்து

முத்திதர நின்ற முறையறிவ தெக்காலம். 203

நானின்ற பாசமதில் நானிருந்து மாளாமல்

நீநின்ற கோலமதில் நிரவிநிற்ப தெக்காலம். 204

எள்ளும்கரும்பும் எழுமலரும் காயமும்போல்

உள்ளும் புறம்புநின்ற துற்றறிவ தெக்காலம். 205

அன்னம் புனலைவகுத் தமிர்தத்தை யுண்டதுபோல்

என்னைவகுத் துன்னை இனிக்காண்பதெக்காலம். 206

அந்தரத்தில் நீர் பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல்

சிந்தைவைத்துக் கண்டு தெரிசிப்ப தெக்காலம். 207

பிறப்பும் இறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று

மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம். 208

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை

என்னு ளொருநினைவை எழுப்பிநிற்ப தெக்காலம். 209

ஆசைகொண்டமாதர் அடைகனவு நீக்கியுன்மேல்

ஓசைகொண்டு நானும் ஒடுங்குவது மெக்காலம். 210

தன்னுயிரைக் கொண்டு தான்றிரிந்த வாறதுபோல்

உன்னுயிரைக் கொண்டிங் கொடுங்குவது மெக்காலம். 211

சேற்றிற் கிளைநாட்டுந் திடமாம் உடலையினிக்

காற்றிலுழல் சூத்திரமாய்க் காண்பதினி யெக்காலம். 212

என்வசமுங் கெட்டிங் கிருந்தவச மும்மழிந்து

தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்திருப்ப தெக்காலம். 213

தன்னை மறந்து தலத்து நிலைமறந்து

கன்மம் மறந்து கதி பெறவ தெக்காலம். 214

என்னை யென்னிலே மறைந்தே இருந்தபதி யும்மறந்து

தன்னையுந் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம். 215

தன்னையுந் தானேமறந்து தலைவாசற் றாழ்போட்டே

உன்னைநினைந் துள்ளே யுறங்குவது மெக்காலம். 216

இணைபிரிந்த போதிலன்றி யின்பமுறும் அன்றிலைப்போல்

துணைபிரிந்த போதருள்நூல் தொடர்ந்து கொள்வ தெக்காலம். 217

ஆட்டம் ஒன்றுமில்லாமல் அசைவுசற்றுங் காணாமல்

தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம். 218

முன்னைவினை யாலறிவு முற்றாமற் பின்மறைந்தால்

அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம். 219

கள்ளுண் டவன்போற் களிதருமா னந்தமதால்

தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவ தெக்காலம். 220

தானென்ற ஆணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே

ஏனென்ற பேச்சுமிலா திலங்குவது மெக்காலம். 221

நானவனாய்க் காண்பதெல்லா ஞானவிழி யாலறிந்து

தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம். 222

தானந்த மில்லாத தற்பரத்தி னூடுருவி

ஆனந்தங் கண்டே அமர்ந்திருப்ப தெக்காலம். 223

உற்ற வெளிதனிலே உற்றுப்பார்த் தந்தரத்தே

மற்ற மறமாய்கை மாள்வதினி யெக்காலம். 224

ஏடலர்ந்த பங்கயமும் இருகருணை நேத்திரமுந்

தோடணிந்த குண்டலமுந் தோன்றுவது மெக்காலம். 225

ஐயாமும் ஆறு அகன்று வெறுவெளியில்

மையிருளில் நின்றமனம் மாள்வதினி யெக்காலம். 226

காட்டும் அருண்ஞானக் கடலிலன்புக் கப்பல்விட்டு

மூட்டுங்கரு ணைக்கடலில் மூழ்குவது மெக்காலம். 227

நானாரோ நீயாரோ நன்றாம் பரமான

தானோரோ வென்றுணர்ந்து தவமுடிப்ப தெக்காலம். 228

எவரவர்க ளெப்படிகண் டெந்தப்படி நினைத்தார்

அவரவர்க் கப்படிநின் றானென்ப தெக்காலம். 229

உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை

நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பதினி யெக்காலம். 230

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்

களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம். 231

என்னையே நானறியேன் இந்தவண்ணஞ் சொன்னதெல்லாம்

முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவ தெக்காலம். 232

மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கிக்

காயத்தை வேறாக்கிக் காண்பதுனை எக்காலம் 233

ஐஞ்சு கரத்தானை அடியிணையைப் போற்றிசெய்து

நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம். 234


 


முதல்வன் முறையீடு


கன்னி வனநாதா - கன்னி வனநாதா

1. மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா!

2. அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!
பிறியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா!

3. தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!
மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா!

4. மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா!
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா)

5. மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா!
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.

6. மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே:
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே.

7. வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே:
சித்துகற்கும் ஆசை சிதையேனே என்குதே:

8. மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே:
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே.

9. கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே:
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே:

10. மாற்றும் சலவை மறக்கேனே என்குதே:
சோற்றுக் குழியும் இன்னம் தூரேனே என்குதே.
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

11. ஐந்து புலனும் அடங்கேனே என்குதே:
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே.

12. காமக் குரோதம் கடக்கேனே என்குதே:
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே

13. அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே:
கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே:

14. நீர்க்குமிழி ஆம்உடலை நித்தியமாய் எண்ணுதே!
ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே.

15. கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே.

16. அநித்தியத்தை நித்தியம் என்றாதவராய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனை மறக்கேன் என்குதே.

17. நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே.
உரகப் படத்தல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே.

18. குரும்பை முலையும் குடிகெடுப்பேனே என்குதே.
அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே.

19. மாதர் உருக் கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே.
ஆதரவும் அற்று இங்கு அரக்காய உருகிறண்டா!

20. கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா!
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

21. புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?

22. கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?

23. பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனை செய் தானவராய் வீந்தநாள் போதாதோ?

24.அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ?

25. தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ?

26. நோய்உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேய்உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ?

27. ஊனவுடல் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பில் இளைத்தநாள் போதாதோ?

28. பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ?

29. நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரும் என்பாராம் எடுத்தநாள் போதாதோ?

30. காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ?

31.நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ?

32. உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ?
வருத்தம் அறிந்தையிலை! வாவென்று அழைத்தையிலை!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

33. பிறப்பைத் தவிர்த்தயிலை. பின்னாகக் கொண்டையிலை:
இறப்பைத் தவிர்த்தையிலை. என்னென்று கேட்டையிலை.

34. பாசம் எரித்தையிலை: பரதவிப்பைத் தீர்த்தையிலை:
பூசிய நீற்றைப் புனைஎன்று அளித்தையிலை:

35. அடிமை என்று சொன்னையிலை: அக்கமணி சந்தையிலை:
விடும் உலகம் நோக்கி உன்றன் வேடம் அளித்தையிலை:

36. உன்னில் அழைத்தயிலை: ஒன்றாகிக் கொண்டையிலை:
நின் அடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை:

37. ஓங்கும் பரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை.

38. நாமம் தரித்தையிலை: நான் ஒழிய நின்றையிலை:
சேம அருளில் எனைச் சந்தித்து அழைத்தையிலை:

39. முத்தி அளித்தையிலை: மோனம் கொடுத்தையிலை:
சித்தி அளித்தையிலை: சீராட்டிக் கொண்டையிலை.

40. தவிப்பைத் தவிர்த்தையிலை: தானாக்கிக் கொண்டையிலை:
அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை.

41. நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை:
துன்றங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை:

42. கட்ட உல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை:
நிட்டையிலே நில் என்று நீ நிறுத்திக் கொண்டையிலை.
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா)

43. கடைக்கண் அருள் தாடா! கன்னி வனநாதா!
கெடுக்கும் மலம் ஒறுக்கிக் கிட்டிவரப் பாரேடா!

44. காதல் தணியேனா! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடம் தான் தீரேனோ!

45. உன்னைத் துதியேனோ! ஊர்நாடி வாரேனோ!
பொன் அடியைப் பாரேனோ! பூரித்து நில்லேலேனா!

46. ஓங்காரப் பொன் சிலம்பின் உல்லாசம் பாரேனோ!
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ!

47. வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ!
சூரர் கண்டு போற்றும் அந்த சுந்தரத்தைப் பாரேனோ!

48. இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ!
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ!

49. ஆனை உரிபோர்த்த அழுகுதனைப் பாரேனோ!
மானைப் பிடித்து ஏந்தும் மலர்க்கரத்தைப் பாரேனோ!

50. மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ!
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனா!

51. கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ!
தொண்டார் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ!

52. அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ!
திருநயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ!

53. செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ!
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ!

54. முல்லை நிலவெறிக்கும் மூரல்ஒளி பாரேனோ!
அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ!

55. மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ!
சிகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ!

56. கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ!
பொங்கு அரவைத் தான் சடையில் பூண்ட விதம் பாரேனோ!

57. சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ!
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ!

58. கொக்கிற்கு சூடிநின்று கொண்டாட்டம் பாரேனோ!
அக்கினியை ஏந்திநின்ற ஆனந்தம் பாரேனோ!

59. தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ!
தாக்கும் முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ!

60. வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ!
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ!

61. அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ!

62. சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ!
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

63. கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா!
பட்டநாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ!

64. நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ?
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ?

65. வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ?

66. வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ?
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ?

67. ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ?
ஊனம் அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ?

68. என்னென்று சொல்லுவண்டோ? என்குருவே! கேளேடா!
பின்னை எனக்குநீ யல்லாமல் பிறிதிலையே.
(கன்னி வனநாதா!-கன்னி வனநாதா!)

69. அன்ன விசாரமது அற்ற  இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?

70. உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ?

71. ஒப்புவமை பற்றொடு ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ?

72. வாக்கு மனாதீத வகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள்குருவே! நின் தாள் இணைக்கே யான் போற்றி!