Showing posts with label தத்துவங்கள். Show all posts
Showing posts with label தத்துவங்கள். Show all posts

உடலும் பிரபஞ்சமும் | THE BODY AND THE UNIVERSE |


உடலெனும் பிரபஞ்சம்

ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம்...

இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள்.

இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

"நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்
நேரான தேயுவோடு வாயுமாகும்
அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்
அரிதான பிருதிவியு மண்ணு மாகும்
தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு
தாக்கான வாயுவது காற்றுமாகும்
இகழ்ந்தவா காயமது சத்தமாகும்
ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே"

-யூகி வைத்திய சிந்தாமணி..

மண்ணின் கூறுகள்..

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நீரின் கூறு (புனலின் கூறு)..

நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பின் கூறு...

உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.
நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்...

வளியின் (காற்று) கூறு..

ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.
வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணின் (ஆகாயம்) கூறு

இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)
விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.

மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.

இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது.

சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)
திருவாணைக்கால் நீர்
திருவண்ணாமலை நெருப்பு
காளஹஸ்தி காற்று
சிதம்பரம் ஆகாயம்.

*பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச்செய்துள்ளனர்...*

*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*

*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

 


தத்துவங்கள்

தத்துவ உலகில், விஞ்ஞானம் என்பது இன்று மேலை நாட்டில் சயின்ஸ் என்ற பெயரில் பூதாகாரமாய் வளர்ந்து, மனிதனைத் தாண்டி, மனித தத்துவத்திற்கு அப்பால் உள்ள இயற்கையின் சக்திகளையெல்லாம் ஆராய்ந்து, ஜடஇயல் கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றின் சாதனைகளை ஆக்கப் பணியை விட அழிவுவெறிக்கே அதிகம் பயன்படுத்தி வருகிறது. ஆனால் நம் பாரதநாட்டுப் பழம்பெரும் விஞ்ஞானமோ ஆத்ம ஞானம் என்ற பெயரால் முழுமையான வளர்ச்சியுற்று, மனிதனின் உடலுக்குள்ளேயே இயற்கையின் சக்திகளையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை அகக் கருவிகளைக் கொண்டே ஒழுங்காக இயக்கி உன்னத நிலைக்கு உயர்த்தி, அந்த உன்னத நிலையில் இறைவனையும் தன் இருதயத்திற்குள்ளேயே இருத்தி, அந்த இறைவனோடு இரண்டறக் கலக்கும் எல்லையில்லா ஆனந்தமான பேரானந்தமான நிலை அடைவதற்கு வழிகாட்டுவதாகும். இந்த வழியில் நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களையும், அறிவுரைகளையும் அறநெறிகளையும் அப்பியாச யோகங்களையும், யுக்தி முறைகளையும் நாடோடிப் பாடல்களாக வழங்கியிருக்கிறார்கள். அப்பாடல்கள் எல்லாம் பாமரர்களின் நெஞ்சங்களிலும் பதியும்படியும் பாலர்களின் வாய்களிலும் எதிரொலிக்கும்படியும் சுவையோடு மிகவும் எளிய தமிழிலே அமைந்திருக்கிறது என்றாலும், பாடல்களினூடே ஆங்காங்கே நுட்பமான தத்துவங்களும், இருபொருட் சொற்களும் இலைமறைகாய்கள் போல் குலுங்குகின்றன. அவற்றைப் புரிந்து கொள்வதற்கு அந்தந்தப் பாடல் வரும் பக்கங்களின் அடியில் அருஞ்சொற்களுக்கும் பாடல்களின் வரி எண்களைக் குறிப்பிட்டு பொருள் தந்திருப்பதோடு, புத்தகத்தின் இறுதியில் தத்துவ விளக்கங்களுக்கும். அருஞ்சொற்களுக்கும் அகர வரிசையில் தொகுக்கப்பட்டு, பொருள் அகராதி ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர இப்புத்தகத்திலுள்ள ஞானசர நூல், குருஞான சம்பந்த சுவாமிகளின் சிவபோக சாரம். அருணாசல குருவின் நிஜானந்த போதம் முதலியனவற்றிலும் தத்துவ விளக்கங்களைப் படித்துணரலாம். அவற்றோடு பொதுவான தத்துவம் பற்றிப் பின்வரும் சில தத்துவக்குறிப்புகளும் வாசகர்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

பிரபஞ்சத் தத்துவம்

இறைவன் படைக்கும் முன் இந்தப் பிரபஞ்சம் பெயர் உருவமற்று சுத்த வெளியாய், நிர்க்குணமாய், சின்மாத்திரப் பரப்பிரம்மமாக இருந்தது.

அதிலிருந்து பிரமையினால் கானல் நீர் தோன்றுவது போல் மூலப் பிரகிருதி என்னும் இல் மாயை ஒன்று தோன்றியது  அந்த மூலப் பிரகிருதி வெண்மை, சிகப்பு, கறுப்பு என்னும் மூன்றுவித நிறங்களோடு மூன்றுவிதச் சக்திகளாயிற்று. வெண்மை நிறத்ததே மாயா சக்தி. சிகப்பு நிறுத்தது அவித்யா சக்தி. கறுப்பு நிறுத்தது ஆவரண விக்ஷேப சக்தி. இவற்றை முறையே மாயை, அறியாமை (அஞ்ஞானம்) முனைப்பு (அகங்காரம் ) எனச் சொல்லலாம்.

மாயா சக்தி சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்கும் அதில் பரப்பிரம்மம் பிரதி பலிப்பதினால் தோன்றிய பிரதிபிம்பமே ஈஸ்வரன் என்று கூறப்படும். ஈஸ்வரன் அந்த மாயையைத் தன் வசப்படுத்திக் கொண்டு பிருமா விஷ்ணு ருத்திர வடிவமாக நின்று உலகங்கள், யாவையும் படைத்தல், காத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம்) என்னும் முத்தொழில்களையும் இயற்றி விளையாடி வருகின்றான்.

எனவே, பரப் பிரம்மத்திலிருந்து மாயையும். மாயையில் இருந்து அவித்தை எனப்படும். அறியாமையும் (அஞ்ஞானமும்) அந்த அவித்தையிலிருந்து ஆவரண விக்ஷேப சக்தி எனப்படும். அகங்கார ஆற்றலும், அந்த அகங்காரத்திலிருந்து ரஸம், ரூபம், ஸ்பரிசம், சப்தம், கந்தம் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) எனப்படும் ஐந்து நுண்பொருட்களான பஞ்ச தன் மாத்திரைகளும், அவற்றிலிருந்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம்) எனப்படும் பருப் பொருள்களான ஐம்பெரும் பூதங்களும் அப்பஞ்ச பூதங்களினால் பிரபஞ்சமும் பிராணிகளும் உண்டாயின. மாயையினால் உண்டான பிரபஞ்சமும் மாயா சரீரமும் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து ஜீவன்களை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புகளுக்கு ஆளாக்கிக் கொண்டே வரும். முடிவில், எல்லாம் அழிவுறும் பிரளய காலத்தில் எல்லா நதிகளும் கடல் நீரிலே உண்டாகிக் கடைசியில் கடலிலே விழுந்து ஒன்றாகக் கலந்து விடுவது போலவே, பிருமா முதல் மனிதர் மிருகங்கள் முதலான சராரசப் பொருட்களெல்லாம் எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து உண்டாயினவோ அந்தப் பரப் பிரமத்திலேயே ஒன்று கலந்து ஏகமாய் ஜக்கியமாகிவிடும்.

நம் உடல்

மனித உடலானது அவரவர் கையினால் எட்டு சாண் அளவு நீளமும் நான்கு சாண் அளவு பருமனும், 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடம்பில் 96 தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.

உடலின் தத்துவங்கள் : 96

அவையாவன: உடலின் வாசல்கள் 9ம். ஆன்ம தத்துவங்கள் 24ம் தாதுக்கள் 7ம் கோசங்கள் 5ம், குணங்கள் 3ம், மலங்கள் 3ம், பிணிகள் அல்லது வியாதிகள் 3ம் ராகங்கள் அல்லது விகாரங்கள் 8ம், ஆதாரங்கள் 6ம், மண்டலங்கள் 3ம் நாடிகள் 10ம், வாயுக்கள் 10ம், அவத்தைகள் 5ம் ஆக தத்துவங்கள் 96.

உடலின் வாசல்கள் ஒன்பது

கண்கள் இரண்டு; செவிகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு வாய் ஒன்று; குய்யம் எனப்படும் கருவாயான ஆண் குறி அல்லது பெண் குறி ஒன்று; குதம் எனப்படும் மலவாய் ஒன்று ஆக வாசல்கள் ஒன்பது.

ஆன்ம தத்துவங்கள்  24

அவையாவன: பூதங்கள் 5; ஞானேந்திரியங்கள் 5; கர்மேந்திரியங்கள் 5; தன்மாத்திரைகள் 5; அந்தக் கரணங்கள் 4 ஆக 24,

பூதங்கள் 5

இவை பஞ்ச பூதங்கள் எனப்படும். அவையாவன: 1. பிருதிவி (பூமி) 2. அப்பு (ஜலம்) 3. தேயு, (அக்னி) 4. வாயு, 5. ஆகாயம். இவை முறையே தமிழில் 1. நிலம் (மண்), 2. நீர் (புனல்) 3. நெருப்பு (அனல்) 4. காற்று (கால்) 5. விசும்பு என வகுக்கப்பட்டு ஐம்பெரும் பூதங்கள் ஐந்து பருப்பொருள்கள் எனவும் வழங்கப்படும்.

ஐம்பூதங்களால் உடல் உண்டாதல்

நிலம், நீர்,நெருப்பு, காற்று, விசும்பு எனப்படும் ஐந்து பருப்பொருட்களில் அதாவது பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் ஐம்பெரும் பூதங்களில் ஒவ்வொன்றும் சமஷ்டி, வியஷ்டி, என இரண்டு பாகங்களாகி இரண்டு பூதங்களாயிற்று, சமஷ்டி என்றால் ஒன்றாயிருத்தல், இதற்கு உதாரணம் தோப்பு, வியஷ்டி என்றால் வெவ்வேறாக இருத்தல். இதற்கு உதாரணம் மரம். இவற்றில் முதற்பாகப் பஞ்ச பூதங்களே பிரபஞ்சமாயிற்று. இரண்டாவது பாகப் பஞ்ச பூதங்கள் இருபத்தைந்து தத்துவங்களாகி, அவை ஒன்று சேர்ந்து மனித உடல் உண்டாயிற்று.

அதன் விளக்கம்: முதலில் ஆகாயம் இரண்டு பாகங்களானபோது, முதற்பாதிப் பாகமான சமஷ்டி ஆகாயம் ஞாதாவாயிற்று, அதாவது அதில் தோன்றிய பிரம்மமும், பிரம்மத்தின் பிரதிபிம்பமும் கூடியதே ஞாதாவாகும். இந்த ஞாதாவை அக்ஷரன் எனவும் க்ஷேத்ரஞ்ஞன் எனவும்,  புருஷன் எனவும், ஜீவன் எனவும் சொல்வார்கள்.

ஆகாயத்தின் இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி ஆகாசத்தை நான்கு பாகங்களாக்கி, அவற்றில் முதற்பாக வியஷ்டி ஆகாசத்தை காற்றோடு (வாயுவோடு) சேர்த்தபோது சங்கல்பம் ( மனஸ்) என்னும் மனத் தத்துவம் பிறந்தது. இரண்டாவது பாக வியஷ்டி ஆகாசத்தை நெருப்போடு (தேயுவோடு) சேர்த்தபோது புத்தி (அறிவு) என்னும் தத்துவம் பிறந்தது. மூன்றாவது பாக வியஷ்டி ஆகாசத்தை நீரோடு (அப்புவோடு) சேர்த்தபோது சித்தம் (நினைவிறுத்தல்) என்னும் தத்துவம் பிறந்தது. நான்காவது பாக வியஷ்டி ஆகாசத்தை நிலத்தோடு (பிருதிவியோடு) சேர்த்தபோது அகங்காரம் ( முனைப்பு) என்னும் தத்துவம் பிறந்தது. இந்நான்கும் அந்தக்கரணங்கள் அல்லது அகக்கருவிகள் எனக் கூறப்படும்.

அடுத்ததாக வாயு (காற்று) இரண்டு பாகங்களாகி அவற்றில் முதற்பாதிப்பாகமான சமஷ்டி வாயுவானது வியான வாயுவாக ( தொழிற்காற்றாக) மாறியது. இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி வாயுவோ நான்கு பாகங்களாகப் பிரிந்து முதற்பாக வியஷ்டி வாயுவை ஆகாசத்தோடு சேர்த்தபோது சமான வாயு ( நிரவுக்காற்று) பிறந்தது. இரண்டாவது பாகவியஷ்டி வாயுவை நெருப்போடு சேர்த்த போது உதான வாயு (ஒலிக்காற்று) பிறந்தது. மூன்றாவது பாக வியஷ்டி வாயுவை நீரோடு சேர்த்த போது பிராண வாயு (உயிர்க்காற்று) பிறந்தது. நான்காவது பாக வியஷ்டி வாயுவை பிருதிவியோடு (நிலத்தோடு அல்லது மண்ணோடு சேர்த்த போது அபானவாயு (மலக்காற்று) பிறந்தது. இவ்வைந்து வாயுக்களும் எல்லா ஜீவராசிகளுக்கும் பஞ்ச பிராணன்களாக இருந்து வருகின்றன.

அடுத்ததாக தேயு அக்கினி (நெருப்பு) இரண்டு பாகங்களாகி அவற்றில் முதற்பாதிப் பாகமான சமஷ்டி அக்கினியோ கண்களாயின, இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி அக்கினியோ நான்கு பாகங்களாகப் பிரிந்து.  அவற்றில் முதற்பாக வியஷ்டி அக்கினியை ஆகாசத்தோடு சேர்த்தபோது செவிகள் தோன்றின. இரண்டாவது பாக வியஷ்டி அக்கினியை வாயுவோடு சேர்த்தபோது உடல் பிறந்தது. மூன்றாவது பாக வியஷ்டி அக்கினியை நீரோடு சேர்த்த போது வாய் அல்லது நாக்கு தோன்றியது. நான்காவது பாக வியஷ்டி அக்கினியை பிருதிவியோடு (மண்ணோடு) சேர்த்தபோது மூக்கு தோன்றியது.

அடுத்ததாக அப்பு ( நீர் அல்லது ஜலம்) இரண்டு பாகங்களாகி, அவற்றில் முதற்பாதிப் பாகமான சமஷ்டி ஜலமோ ரசம் (சுவை) என்னும் தன்மாத்திரை ஆயிற்று. அதாவது ருசி அறிவதாயிற்று. இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி ஜலமோ நான்கு பாகங்களாகி, அவற்றில் முதற்பாகத்தை ஆகாசத்தோடு சேர்த்தபோது சப்தம் (ஓசை) பிறந்தது. இரண்டாவது பாகத்தை வாயுவோடு சேர்த்தபோது ஸபரிசம் ( ஊறு) தோன்றியது. மூன்றாவது பாகத்தை நெருப்போடு சேர்த்தபோது ரூபம் (ஒளி-பார்வை) பிறந்தது. நான்காவது பாகத்தை பிருதிவியோடு (மண்ணோடு) சேர்த்த போது கந்தம் (நாற்றம் - வாசனை நுகர்தல்) பிறந்தது.

அடுத்ததாக பிருதிவி (நிலம், பூமி, மண் எனப்படுவது) இரண்டு பாகங்களாகி, அவற்றில் முதற் பாதிப் பாகமான சமஷ்டி பிருதிவியானது குதம் (மலத்தைத் தள்ளும் மலவாய்) ஆயிற்று. பிறகு இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டிப் பிருதிவியோ மேலும் நான்கு பாகங்களாகப் பிரிந்து, அவற்றில் முதற்பாகத்தை ஆகாசத்தோடு சேர்த்தபோது வாக்கு ( பேசுவதற்குரிய வாய்) தோன்றியது.

இரண்டாவது பாகத்தை வாயுவோடு (காற்றோடு) சேர்த்தபோது பாணி (கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் உரிய கை) தோன்றியது. மூன்றாவது பாகத்தை நெருப்போடு சேர்த்தபோது பாதம் (நடப்பதற்கும் நிற்பதற்கும் உரிய கால்) தோன்றியது. நான்காவது பாகத்தை நீரோடு சேர்த்தபோது குய்யம் (அதாவது ஆண் பெண் இன்பத்திற்குரிய மர்மக்குறி) தோன்றியது.

மேற்கூறிய இருபத்தைந்து தத்துவங்களும் சேர்ந்து உடல் பிறக்கிறது.

ரஸம், ரூபம், ஸ்பரிசம், சப்தம், கந்தம் (சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம்) என்னும் ஐந்து குணங்களையுடைய பிருதிவியினால் (மண் தத்துவத்தினால்) தாவர ஜங்கம உருவங்களான பிரபஞ்சம் அனைத்தையும் பிரும்மதேவன் படைக்கிறார். சப்த ஸ்பரிச ரூப ரசம் என்னும் நான்கு குணங்களை உடைய அப்புவினால் (நீர்த் தத்துவத்தினால்) பிரபஞ்சங்கள் அனைத்தையும் மகாவிஷ்ணு காத்தருள்கிறார். சப்த ஸ்பரிச ரூபம் என்னும் மூன்று குணங்களை உடைய தேயுவினால் (நெருப்புத் தத்துவத்தினால்) பிரபஞ்சங்கள் அனைத்தையும் ருத்திரர் அழிக்கிறார். சப்த ஸ்பரிசம் என்னும் இரண்டு குணங்களை உடைய வாயுவினால் (காற்று தத்துவத்தினால் மகேஸ்வரர் மாயா சம்பந்தமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் பிரமையை உண்டாக்குகிறார். சப்தம் என்னும் ஒரே குணமுள்ள ஆகாசத்தினால் ஜீவன்களுக்கு ஞானத்தை (அறிவை) சதாசிவம் உண்டாக்குகிறார்.

பஞ்ச ஞானேந்திரியங்கள் ( ஐம்பொறிகள்)

1. தொக்கு, 2. சிங்குவை, 3. சட்சு, 4. ஆக்கிராணம் 5. சோத்திரம், இவை தமிழில் முறையே 1. மெய் 2. வாய், 3.கண், 4. மூக்கு, 5. செவி என வகுக்கப்பட்டு ஐம்பொறிகள் என வழங்கப்படும்.

இவற்றின் இயல்பு: 1. மெய் (உடம்புத் தோல்) வாயுவின் அம்சமாகையால் அதன் தன்மைகளான குளிர்ச்சி, வெப்பம் மென்மை, வன்மை என்னும் நான்கு வித ஸ்பரிசங்களையும் உணர்ந்தறியும்.

2. வாய் அல்லது நாக்கு: அப்புவின் (நீரின்) அம்சமாகையால் அதன் தன்மைகளான உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, என்னும் அறுசுவைகளையும் (ரசத்தை) ருசித்தறியும்.

3. கண்: தேயுவின் (நெருப்பின்) அம்சமாகையால் அதன் ஒளியை அதாவது கறுப்பு, சிகப்பு, பச்சை, நீலம்,  மாசிர நிறம், நீளம், குட்டை பருமன், மெலிவு முதலான பத்துவித ரூபங்களையும் (ஒளியை) பார்த்தறியும்.

4. மூக்கு: பிருதிவியின் (மண்ணின்) அம்சமாகையால் அதன் தன்மைகளான சுகந்தம் துர்க்கந்தம் என்னும் வாசனைகளை நுகர்ந்தறியும்.

5. செவி: ஆகாசத்தின் (விசும்பின்) அம்சமாகையால், அதன் குணங்களான பலவித சப்தத்தையும் (ஓசையையும்) கேட்டறியும்.

இவை ஐந்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை அறிவதால் பஞ்ச ஞானேந்திரியங்கள் எனக் கூறப்படுகிறது.

பஞ்ச கர்மேந்திரியங்கள்.

1. வாக்கு: 2. பாணி: 3. பாதம்: 4. பாயுரு: 5. உபஸ்தம். கன்மேந்திரியங்கள் எனப்படும். இவை தமிழில் முறையே. 1. வாய். 2. கை: 3. கால்: 4. மலவாய்: (குதம்) 5. கருவாய் என வகுக்கப்பட்டு ஐந்து தொழில் உறுப்புக்கள் என வழங்கப்படும்.

இவற்றில் செயல்கள்: முறையே 1. வசனம் 2. தானம். 3. கமனம்; 4. விசர்ச்சனம்; 5. ஆனந்தம். இவை தமிழில் முறையே. 1. சொல்லல், 2. நடத்தல் 3. ஏற்றல் கொடுத்தல், 4. விடுதல், 5.மகிழ்தல் என வழங்கப்படுகின்றன.

1. வாக்கு - வாய். இது ஆகாசத்தின் அம்சமாகையால் அதன் குணமாக நின்று வசனிப்பது வாக்கு ஆகும்!

2. பாணி - கை; இது வாயுவின் காற்றின், அம்சமாகையால் கொடுத்தல் வாங்கல் பிடித்தல், விடுதல் முதலானவற்றைச் செய்யும்.

3. பாதம் - கால் இது தேயுவின் (நெருப்பின்) அம்சமாகையால் நடத்தல் நிற்றல், அமர்தல் எழுந்திருத்தல் முதலானவற்றைச் செய்யும்.

4. பாயுரு - குதம் மலவாய், இது பிருதிவியின் (மண்ணின்) அம்சமாகையால் மலஜலங்களை வெளியே தள்ளும்.

5. உபஸ்தம் - கருவாய் அல்லது ஆண் பெண் மர்மக்குறி. இது அப்புவின் (நீரின்) அம்சமாகையால் சிறு நீர் கழிப்பதோடு ஆணின் இன்பச் சுரப்பான சுக்கிலத்தையும் பெண்ணின் இன்பச் சுரப்பான சுரோணிதத்தையும் வெளிப்படுத்தி போகானந்தம் விளைவிக்கும்.

இவை இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரியம் செய்வதால் கர்மேந்திரியங்கள் என வழங்கப்படுகின்றன.

பஞ்ச தன்மாத்திரைகள்

1. ரசம் : 2. ரூபம்: 3. ஸ்பரிசம் 4. சப்தம் : 5. கந்தம்: இவை தமிழில் முறையே 1. சுவை; 2. ஒளி ;3. ஊறு; 4. ஓசை; 5. நாற்றம் என வகுக்கப்பட்டு ஐந்து நுண்ணிய பொருள்கள் என வழங்கப்படும்.

இவற்றின் இயல்புகள்:

1. ரசம் - நீரின் தன் மாத்திரையான இது நாவில் நீர் சம்பந்தமிருப்பதால் அந்த நாவிலிருந்து அறு சுவைகளின் பேதங்களை உணர்விக்கும்.

2. ரூபம், தேயுவின் (நெருப்பின்) தன்மாத்திரையான இது. கண்களின் நெருப்பின் இயல்பு சம்பந்தப்பட்டிருப்பதால் பத்து விதமான உருவங்களையும் விழிவழியே காண்பிக்கும்.

3. ஸ்பரிசம் - வாயுவின் தன் மாத்திரையான இது. <உடலில் பிராணன் முதலான வாயுக்கள் அனைத்தோடும் வியாபித்திருப்பதால் தொட்டுக்காட்டும் ஸ்பரிச குணத்தை உடலிலிருந்து உணர்த்தும்.

4. சப்தம் - ஆகாயத்தின் தன் மாத்திரையான இது காதின் உட்புறத்திலுள்ள மெல்லிய ஜவ்வின் வழியாக ஓசையை உணர்விக்கும்.

5. கந்தம் - பிருதிவியின் (மண்ணின்) தன் மாத்திரையான இது மூக்கில் பிருதிவியின் சம்பந்தமிருப்பதால் அந்த மூக்கின் வழியே நறுமணம் துர்க்கந்தமான வாசனைகளை அறிவிக்கும்.

சப்தமானது ஆகாயத்திலும் செவியிலும் ஒடுங்கும்
ஸ்பரிசமானது காற்றிலும் உடம்பிலும் ஒடுங்கும்
ரூபமானது நெருப்பிலும் கண்ணிலும் ஒடுங்கும்
ரசமானது நீரிலும் நாவிலும் ஒடுங்கும்
கந்தமானது மண்ணிலும் மூக்கிலும் ஒடுங்கும்
வசனமானது வாக்கிலும் ஆகாயத்திலும் ஒடுங்கும்
கமனமானது காற்றிலும் காலிலும் ஒடுங்கும்
தானமானது நெருப்பிலும் கையிலும் ஒடுங்கும்.
விசர்க்கமானது நீரிலும் குதத்திலும் ஒடுங்கும்.
ஆனந்தமானது மண்ணிலும் குய்யத்திலும் ஒடுங்கும்

சக்கரங்களில் சுவாசம்

நம் உடம்பிலுள்ள இவ்வேழு சக்கரங்களிலே நம்முடைய மூச்சு சுற்றிக் கொண்டிருப்பதால், அதன் நடப்பையும் அவ்வவ் சக்கரத்திற்குரிய அதி தேவதைகளையும் உணர வேண்டும். மூலாதாரத்திற்கு அதிதேவதை விக்கினேஸ்வரரான கணபதி. அவருக்காக காலை 6 மணி முதல் 6 மணி 40 நிமிடங்கள் வரை 600 மூச்சுகள் (ஸட்ஸதம்) நம்முள்ளே மூலாதாரத்தில் நடந்து கணபதியின் பசியை ஆற்றி அவரைத் திருப்திப்படுத்தும், பிறகு அந்த மூச்சு சுவாதிஷ்டான சக்கரத்திற்கு சென்று அதன் அதிதேவதையான பிரஜாபதி எனும் பிருமதேவருக்காக காலை மணி 6.41 முதல் பகல் 1.20 மணி வரை ஆறாயிரம் மூச்சுகளாக (ஷட்ஸஹஸ்ரமாக) நடந்து அவருடைய பசியை ஆற்றி அவரைத் திருப்திப்படுத்தும் - பிறகு  மூச்சு அந்த இடத்திலிருந்து நாபி ஸ்தானத்திற்கு (கொப்பூழின் இடத்திற்கு) சென்று அங்குள்ள மணிபூரகச் சக்கரத்தினுள் நுழைந்து,அதன் அதிதேவதையான மகாவிஷ்ணுவிற்காக பகல்மணி 1.20 முதல் இரவு 8 மணி வரை ஆறாயிரம் மூச்சுகள் நடந்து அவருடைய பசியை ஆற்றி அவரைத் திருப்தி செய்யும். பிறகு அந்த மூச்சு அவ்விடத்திலிருந்து இருதய கமலமான அனாகதச் சக்கரத்திற்கு சென்று அதன் அதிதேவதையான ருத்திரருக்காக இரவு 8--1 முதல் இரவு மணி 2-40 வரை ஆறாயிரம் மூச்சுகள் நடந்து அவரைத் திருப்திப்படுத்தும். பிறகு மூச்சு அவ்விடத்திலிருந்து கண்ட ஸ்தானத்திலுள்ள விசுத்தி சக்கரத்திற்கு சென்று அதன் அதி தேவதையான மகேஸ்வரருக்காக இரவு மணி 2-41 முதல் 3-46 வரை ஆயிரம் மூச்சுகளாக (ஸஹஸ்ரமாக) நடந்து அவரைத் திருப்திப்படுத்தும். பிறகு மூச்சு அவ்விடத்திலிருந்து புருவங்களின் மத்தியிலுள்ள ஆக்ஞேய சக்கரத்திற்கு சென்று அதன் அதிதேவதையான ஜீவன் அல்லது ஈஸ்வரனுக்காக இரவு 3-47 முதல் 4.53 வரை ஆயிரம் மூச்சுகள் நடந்து அவரை திருப்தி செய்யும். பிறகு மூச்சு அவ்விடத்திலிருந்து தலையின் பிரம கபாலத்திலுள்ள ஸஹாஸராரச் சக்கரத்திற்கு சென்று அதன் அதிதேவதையான பரமாத்மாவிற்காக காலை மணி 4.54 முதல் 6 மணி வரை ஆயிரம் மூச்சுகள் நடந்து அவரைத் திருப்தி செய்யும், பிறகு அந்த மூச்சு மறுபடியும் மூலாதாரத்திலுள்ள கணபதியைத் திருப்தி செய்யச் செல்லும். இவ்வாறு வாழ்நாள் தோறும் நடந்து கொண்டிருக்கும்.

நம் உடம்பிலுள்ள இந்த ஏழுச்சக்கரங்களையும் சுட்டிக் காட்டுவதற்கே ஸ்ரீரங்கத்திலுள்ள கோயிலுக்கு ஏழு சுற்றுப் பிரகாரங்கள் கட்டப்பட்டதாகக் கூறுவார்கள். திருப்பதியை ஏழுமலை என்பதும் நம்முள் இருக்கும் இவ்வேழு சக்கரங்களைச் சுட்டிக் காட்டுவதற்கேயாகும். மேலும் சிவத்தலங்களான காஞ்சி, திருவண்ணாமலை, ஐம்புகேச்வரம். காளஹஸ்தி, சிதம்பரம், காசி, மதுரை, என்னும் க்ஷேத்திரங்களை நம் உடம்பினுள்ளே முறையே மூலாதாரம் சுவாதிஷ்டானம். மணிபூரகம் அநாகதம் விசுத்தி, ஆக்ஞேயம். ஸஹஸ்ராரம் என்னும் ஏழு சக்கரங்களிலும் காணலாம் என்றும் கூறுவார்கள்.

மூன்று மண்டலங்கள்

1. அக்கினி மண்டலம்: 2. ஆதித்த (சூரிய) மண்டலம் 3. சந்திர மண்டலம், இவற்றை தமிழில் முறையே தீமண்டிலம், ஞாயிற்று மண்டிலம் திங்கள் மண்டிலம் என வழங்கலாம். இவை நம் உடலிலேயே இருப்பவை.

அக்கினி மண்டலம், மூலாதாரத்திற்கு இரண்டு விரலளவு மேலே பிருதிவியும் அப்பும் (மண் தத்துவமும் நீர்த்தத்துவமும்) கூடின இடத்தில் முக்கோணமாய் நான்கு இதழ் கமலமாக இருக்கும்.

ஆதித்த (சூரிய) மண்டலம் - உந்திக்கு மேலே, இருதய கமலத்தில் அறுகோணமாய் எட்டு இதழ்க் கமலமாக இருக்கும். இது வாழைப் பூப்போல கீழ்நோக்கியிருக்கும்.

சந்திரமண்டலம் -  மூலாதாரம் முதலாக ஒவ்வொரு எழுத்தை முன்னிட்டுக் கொண்டு தலையின் நடுவே, அக்கினி, மண்டலத்தை நோக்கியவாறு கோடிக் சந்திரர்கள் உதித்ததுபோல் பிரகாசத்தோடு நிலையாக இருக்கும். இதை அமிர்தகலை என்றும் சொல்வார்கள். அமிர்தம் மேல் நோக்கியும் அக்கினி கீழ்நோக்கியும் சரியாக இருக்கும். இதன் மத்தியில் பராசக்தி வீற்றிருப்பாள்.

நாடிகள் 10-----( தசநாடிகள்)

1. இடைகலை; 2. பிங்கலை; 3. சுழுமுனை; 4. சிகுவை; 5. புருடன்; 6. காந்தாரி; 7. அத்தி; 8. அலம்புடை; 9. சங்கினி; 10. குகு. இவற்றைத் தமிழில் முறையே, 1. இடது மூச்சு அல்லது இடப்பக்க நரம்பு; 2. வலது மூச்சு அல்லது வலது பக்க நரம்பு; 3. நடுமூச்சு அல்லது நடுநரம்பு; 4. உள் நாக்கு நரம்பு; 5. வலக்கண் நரம்பு; 6. இடக்கண் நரம்பு; 7. வலச் செவி நரம்பு; 8. இடச் செவி நரம்பு; 9. கருவாய் நரம்பு; 10. மலவாய் நரம்பு என வழங்குவார்கள்.

இடைகலை - இடது மூக்கில் நடக்கும் மூச்சு, இதைச் சந்திர நாடி என்றும் சக்தி நாடி என்றும் சொல்வதுண்டு.

பிங்கலை - வலது மூக்கில் நடக்கும் மூச்சு, இதைச் சூரிய நாடி என்றும், சிவன் நாடி என்றும் சொல்வதுண்டு, இந்த நாடியும் இடைகலை நாடியும் நெற்றிச் சக்கரம் முதல் மூலாதாரம் வரை வலம் இடமாக வியாபித்து அதன் மத்தியின் சழுமுனையை அனுசரித்து திரியும். புருவ மத்தியில் இவை இருந்து கொண்டு வலது நாசி இடது நாசிகளில் பிராணவாயுவை உஸ்வாஸ நிஸ்வாஸங்களாக நடத்திக் கொண்டிருக்கும்.

சுழுமுனை - இதை ஸுஷும்னா நாடி என்றும் சொல்வார்கள்; இது மூலாதாரம் (மலவாயான குதஸ்தானம்) முதல் தலையிலுள்ள பிரம்ம கபாலம் வரையில் திரிந்து கொண்டிருக்கும் நாடி.

இவை மூன்று நாடிகளும் மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களிலும், மூன்று மண்டலங்களிலும் ஊடுருவி முட்டி நிற்கும். இடைகலை, பிங்கலை இரண்டும் சுழுமுனையிலே இயங்கிக் கத்திரிக்கோலின் பாகமாகி வீணாத்தண்டு என்னும் வில்லிற்கு நாணிட்டதுபோல் கபாலத்தை முட்டிக் குதிரை முகமாய் மூக்களவு வரை பற்றி நிற்கும். இவ்விரண்டும் மாறும் இடமான புருவங்களின் நடுவே நெற்றிடத்தில் தாமரைக் கொடியிலுள்ள நூல்போல் சின்னஞ்சிறு ரந்திரம் உண்டு. அது தான் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் கலக்குமிடமான திரிவேணி சங்கமமாகும் அதுதான் சச்சிதானந்தம் (மெய்யறிவின்பம்) இருக்கும் இடம்.

சிகுவை ( உள் நாக்கு நரம்பு) இந்நாடி மூலாதாரத்தில் தொடங்கி, உண்ணாக்கிலே நின்று அன்னபானங்களை விழுங்கச் செய்யும்.

புருடன் (வலக்கண் நரம்பு) இந்த நாடி மூலாதாரத்தில் தொடங்கி வலது கண் வரை வந்து நிற்கும்.

காந்தாரி (இடக்கண் நரம்பு) இந்த நாடி மூலாதாரம் தொடங்கி இடக்கண் வரை வந்து நிற்கும்.

காந்தாரி, ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இரண்டு நாடிகளும் கண்களில் இருந்து கொண்டு பொருட்களைத் தெரியச் செய்யும். இருதயத்திலிருந்து மேலே வியாபித்திருக்கும்.

அத்தி: இந்த நாடி மூலாதாரம் தொடங்கி வலது காது வரை வந்து நிற்கும்.

அலம்புடை - இந்த நாடி மூலாதாரம்  முதல் இடது காது வரை வந்து நிற்கும். அலம்புஷா என்ற இந்த நாடியும் பூஷா என்னும் நாடியும் செவி ஸ்தானத்திலிருந்து பற்பல சப்தங்களைக் கேட்கச் செய்யும்.

சங்கினி இது மூலாதாரம் முதல் கருவாய் (ஆண் பெண் இனக்குறி) வரை வந்து நிற்கும்.

குரு - இது மலவாய் வரை வந்து நிற்கும். குகு எனப்படும் இந்த குகு நாடியும் சிநீவாலி என்னும் நாடியும் மலஜலங்களை விடச் செய்து அநாகதச் சக்கரம் முதல் லிங்க குத ஸ்தானம் வரை வியாபித்திருக்கும்.

ரக்தவியானன் என்னும் நாடி அநாகதம் (இருதயம்) முதல் சுவாதிஷ்டானம் (லிங்கம்) வரை வியாபித்து இனக் குறியான மர்மஸ்தானத்தில் குரு நாடியோடு கலந்து ஆண் பெண் இன்பச் சுரப்புகளான சுக்கில சோணிதங்களை அதிகமாய் வெளியே தள்ளச் செய்யும்.

வாயுக்கள் 10 (தச வாயுக்கள்)

1. பிராணன்; 2. அபானன்; 3. வியானன்; 4. உதானன்; 5. சமானன்; 6. நாகன்; 7. கூர்மன்; 8. கிருகரன்; 9. தேவதத்தன்; 10. தனஞ்சயன், இவை தமிழில் முறையே 1. உயிர்க் காற்று 2. மலக்காற்று; 3. தொழிற் காற்று 4. ஒலிக் காற்று; 5. நிரவுக் காற்று; 6. விழிக் காற்று; 7. இமைக்காற்று; 8. தும்மல் காற்று; 9. கொட்டாவிக் காற்று; 10. வீங்கல் காற்று என வகுப்பட்டு பத்து வளிகள் என வழங்கப்படும் முதல் ஐந்தும் பிரதான வாயுக்கள், மற்ற ஐந்தும் உபவாயுக்கள்.

1. பிராண வாயு இது இருதய ஸ்தானத்திலிருந்து நாசி (மூக்கு) ரேந்திரங்களின் வழியாக மேல் நோக்கி உஸ்வாஸமாக (ரேசகமாகச்) சஞ்சரித்து பசி தாகங்களை உண்டாக்கி உண்ணும் உணவுகளை ஜீரணிக்கச் செய்யும் இது லலாட மத்தியிலே தோன்றி சந்திர நாடியிலே விழுந்து மூலாதாரத்திலே ஓம் என்று உதித்து நாபியிலுள்ள மணிபூரகச் சக்கரத்தில், ரீம் என்று முட்டி இடைகலை பிங்கலைகளிலே ஓடி. கபாலத்தைச் சுற்றி மூக்கு வழியாகப் புறப்பட்டு, நான்கு விரற்கடையளவு கழிந்து சென்று எட்டு விரற்கடை பிரமாணமீந்துதான் நின்ற ஸ்தானத்திலேயே தாக்கும் என்றும் கூறுவார்கள்.

2. அபானன் - மலக் காற்று. இது குதத்தையும் (மலவாயையும்) குய்யத்தையும்  (கருவாயையும் ; மர்மக் குறியையும்) பற்றி நின்று மலமூத்திரங்களையும் ஆண் பெண் இன்பச் காப்புகளான சுக்கில சோணிதங்களையும் வெளியே தள்ளும்படி செய்து நிஸுவாஸ ரூபமாக (பூரக வடிவமாகச்) சஞ்சரிக்கும்.

3. வியானன் - தொழிற் காற்று, இது உடலின் பாகங்கள் அனைத்திலும் வியாபித்து ஸ்பரிசங்களை கிரகித்துணர்த்தி கலைகளை நிறைவிக்கும் மேலும் உண்ட சோற்றைத் திப்பி வேறு சாறு வேறாகச் செய்து கொண்டிருக்கும்.

4. உதானன் - ஒலிக் காற்று இது உதாரக்கினியை எழுப்பி, கண்ட ஸ்தானத்திலிருந்து அன்னத்தை விழுங்கி, அதன் சாரத்தை நாடிகளுக்கு வியாபிக்கச் செய்து ஓசையோடு கலந்து குரல் ஒலி எழுப்பும் தூங்கும்போது கண், மூக்கு வாய், காது, மேல்தோல் என்னும் ஐம்பொறிகளையும் அஞ்ஞானம் (அறியாமை) எனும் இருளில் அழுந்தச் செய்து தூங்கி எழுந்தவுடன் அந்தந்தப் பொறிகளை அதனதன் ஸ்தானத்தில் இருக்கம்படி செய்யும்.

5. சமானன் (நிரவுக் காற்று) - இது நாபி ஸ்தானத்தில் இருந்து உதான வாயுவினால் அனுப்பப்படும். உணவின் சாரத்தை நாடி (நரம்பு)களுக்கு சமமாகப் பங்கிட்டு நிரவலாக்கி உடலை வளர்க்கும்.

இவை ஐந்தும் உடலில் சஞ்சரிப்பதால் தான் மனிதன் உயிரோடு சஞ்சரிக்கிறான். அதனால் இவை பஞ்ச பிராணன்கள் எனப்படும்.

6. நாகன்  - விழிக் காற்று, இது கண்டத்தில் இருந்து வாந்தியை உண்டு, பண்ணும் கண்களினால் பார்க்கச் செய்யும் முக்கல், சோம்பல், திமிரல் முதலானவற்றையும் உண்டாக்கும்.

7. கூர்மன் - இமைக்காற்று, இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும் மயிர்க் கூச்சல், புளகம், சிரிப்பு, முகலட்சணம் முதலானவற்றை உண்டாக்கும்.

8. கிருகரன் - தும்மற்காற்று இது மூக்கிலிருந்து குருகுருத்து தும்மலை உண்டாக்கி அழவைத்துத் திரியும்.

9. தேவதத்தன் - (கொட்டாவிக் காற்று) இது மார்பில் இருந்து கபத்தை சேர்த்துக் கட்டித் கொட்டாவியையும் விக்கலையும் உண்டாக்கும்.

10. தனஞ்சயன் - வீங்கல் காற்று, இது கருப்பத்திலுள்ள பிண்டலத்தை வெளியே தள்ளும். பிராணன் போய் மனிதன் மாண்ட பிறகும் இது அவனுடைய உடலை விடாமல் பற்றி நின்று உடம்பை வீங்கச் செய்தும் விரிவித்தும் புழுவித்தும் நாற்றமெடுக்கும்படி செய்தும் தகனம் செய்யும் வரை உடம்பிலேயே இருந்து இறுதியில் கபாலத்தைப் பிளந்து கொண்டு போகும்.

இப்பத்து வாயுக்களும் பத்து நாடிகளில் திரிந்து கொண்டிருக்கும்.

இவற்றோடு வயிரவன், முக்கியன், அந்தரியாமி, பிரவஞ்சனன் என்னும் நான்கு வாயுக்களையும் சேர்த்து பதினான்கு வாயுக்கள் என்றும் கூறுவார்கள்.

11. வயிரவன் - கால் எலும்பும் கதிரெழும்பும் கூடியிருக்கும் இடத்திலே நின்று உடலில் அவஸ்தைகளை உண்டாக்கி ஈளை இருமல் முதலான பிணிகளை உண்டாக்கும்.

12. முக்கியன் - கை எலும்புகள்  இரண்டும் கதிரெழும்பும் கூடிய இடத்தில் நின்று உடலின் யாக்கைகளைச் சிறக்க நிறுத்தும்.

13. அந்தரியாமி - ஜீவிதனுக்கு வாகனமாய் இருந்து பிராண வாயுவைத் தோற்றுவிக்கும்.

14. பிரவஞ்சனன் - பிரணவத்திற்கு இருப்பிடமாக இருக்கும். இந்தப் பிரவஞ்சனனும் மேற்கூறிய அந்தரியாமியும் உடலுக்கு அடையாணியாகவும் அச்சாணியாகவும் விளங்குவன.

அவத்தைகள் - 5. (பஞ்சாவஸ்தைகள்)

1. சாக்கிரம் 2. சொப்பணம் ; 3. சுழுத்தி (ஸுஷுப்தி) 4. துரியம்; 5. துரியாதீதம். இவை தமிழில் முறையே 1. நனவு; 2. கனவு; 3. உறக்கம்; 4. பேருறக்கம் (நிட்டை); 5. உயிர்ப்படக்கம் என வகுக்கப்பட்டு ஐவகை நிலைகள் என வழங்கப்படும்.

1. சாக்கிரம் (நனவு) புருவ மத்தியில் சதுரங்க பலத்துடன் ராஜாவைப் போல் கொலு வீற்றிருப்பது சுவை, ஒளி முதலான ஐம்புலன்கள் வாக்கு முதலான ஐந்து கருமேந்திரியங்களின் செயல்கள்; மனம் முதலான நான்கு அந்தக்கரணங்கள் (அகக் கருவிகள் ) இவற்றோடு பராசக்தியின் அருளால் சுகதுக்கங்களை அறிந்து நிற்கும் போது சாக்கிரம் எனப்படும்.

கண்டன ஐந்தும் கலந்த வோரைந்தும்
உண்டன நான்கும் ஓங்கியது உணர்ந்துபின்
பண்டைபினாதி பரந்தது சாக்கிரம்
அண்டமும் தானாய் அமர்ந்தது காணே.

திருமந்திரம்

3. சொப்பனம் (கனவு) - புருவ மத்தியில் நடுச் சக்கரத்தில் இரண்டங்குலப்  பிரமாணத்திலே இருப்பது. பஞ்சேந்திரியங்களும் ஐந்து காமேந்திரியங்களும் கண்டத்திலே நிற்கும் கனவு நிலையே சொப்பனமாகும்.

3. சுழுத்தி (உறக்கம்) - அந்தக்கரணங்கள் நான்கும் கழுத்தியோடு ஜீவாத்மாவைக் கூடி சுவாச இருதயத்திலே நின்று. கண்டவை, கேட்டவை எதுவும் பிறருக்குச் சொல்லப் புலப்படாத நித்திரை நிலையே சுழுத்தியாகும்.

ஆன மனமும் அறிகின்ற புத்தியும்
ஊனையிழந்து நின்றுள்ளே உயிர்ப் பெய்தி
தானமிழந்து தயங்கியவாறு போல
ஊனையிழந்த சுழுத்தியதாமே        திருமந்திரம்

4. துரியம் (பேருறக்கம்) இது நிஷ்டை நிலையாகும். சுழுத்தியை விட்டுக் கரணம் ஒன்றுடனே ஜீவாத்மா நாபிஸ்தானத்தில் நிற்கும் போது உஸ்வாஸ நிஸ்வாச மூச்சுகள் உண்டாகும். ஆகையால் இதற்குத் துரியம் என்று பெயர்.

தானத்தெழுந்து திரியுந் துரியதானம்
வானத்தெழுந்து போய் வையம் பிறக்கிட்டுக்
கானத்தெழுந்து கருத்தின் தலையிலே
ஊனைத் தவிர்த்து ஒளிந்திருந்தானே!    திருமந்திரம்

5. துரியாதீதம் இந்திரியங்கள் பத்தும் அந்தக்கரணங்கள் நான்கும் பற்றற்று ஜீவாத்மா தானே மூலாதாரத்தில் சென்றோங்கி மலம் மதம், மாயை, ஸ்பரிசங்கள் எதையும் அறியாமல் நிற்கும் உயிர்ப் படக்க நிலையே துரியாதீதமாகும்.

இவற்றில் முன் நான்கு அவத்தைகளும் ஒன்றோடு ஒன்று கலந்து மேலும் பதினாறு அவத்தைகளாக வழங்கப்படும்.

1. சாக்கிரத்தில் சாக்கரம் - வார்த்தைகளைக் கேட்கும் போதாவது, விஷயத்தில் ஈடுபடும் போதாவது, மனதை வெளிவியவகாரங்களில் சிறிது கூடப் போக விடாமல் நிலையாக நிறுத்தி, சொற்களைச் சிரத்தையுடன் கேட்டு அவற்றை மறவாதிருத்தல்.

2. சாக்கிரத்தில் சொப்பணம் சரியாகக் கவனிக்காமல் மனதை இடையிடையே அலைய விடுவதால் சில மட்டும் நினைவில் தங்கியும் சில மறைந்து மறந்தும் போய்விடும் நிலை.

3. சாக்கிரத்தில் சுழுத்தி விஷயங்களில் மனதை நிலை நிறுத்தாமல் முற்றிலும் வேறு பக்கம் அலைய விடுவதால் விஷயங்கள் முற்றிலும் மறந்து போய் விடும் நிலை.

4. சாக்கிரத்தில் துரியம் - விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்கும் நிலை.

5. சொப்பனத்தில் சாக்கிரம் - கனவு கண்டு எழுந்த பிறகு கனவில் கண்டது முழுவதையும் ஒன்று கூட விடாமல் பிறருக்குச் சொல்லும் நிலை.

6. சொப்பனத்தில் சொப்பனம் - கனவில் கண்டனவற்றில் சில மட்டும் நினைவில் தங்கியும் சில மறந்தும் போய் இருக்கும் நிலை.

7. சொப்பனத்தில் சுழுத்தி - கனவில் கண்டனவற்றை முற்றிலும் மறந்திருக்கும் நிலை.

8. சொப்பனத்தில் துரியம் - கனவில் கண்டனவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்து ஆனந்தப்படாமலும் துக்கப்படாமலும் இவையெல்லாம் மனதின் வியாபாரங்கள் எனத் தெளிந்துணர்ந்து ஆத்ம ஞானத்தை விசாரித்திருக்கும் நிலை.

9. சுழுத்தியில் சாக்கிரம் - உறங்கியெழுந்த பிறகு அந்த உறக்கத்தின் சுகம் முதலான தன்மைகள் இவ்விதமெனப் பிறருக்கு எடுத்துரைக்கும் நிலை.

10. சுழுத்தியில் சொப்பனம் உறங்கியெழுந்த பிறகு அந்த உறக்கத்தின் தன்மை இன்னதெனத் தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் ஐயுறவு நிலை.

11. சுழுத்தியில் சுழுத்தி - உறங்கியெழுந்த பிறகு உறக்கத்தின் சுகம் முற்றிலும் மறந்து போய்விடும் நிலை.

12. சுழுத்தியில் துரியம் - உறங்கியெழுந்த பிறகு உறக்கத்தின் தன்மை அஞ்ஞான விஷயம் என்றும் அதற்குச் சாட்சியான ஆத்மாவே சத்தியம் என்றும் தெரிந்து கொள்ளும்.

13. துரியத்தில் சாக்கிரம் நிஷ்டையில் இருக்கும்போது சாக்கிர வியவகாரங்களான பிரபஞ்ச விருத்தி உண்டாதல்.

14. துரியத்தில் சொப்பனம் -  நிஷ்டையில் இருக்கும்போது பிரபஞ்ச விருத்தி தோன்றியும் தோன்றாமலும் இருத்தல்.

15. துரியத்தில் சுழுத்தி - நிஷ்டையில் இருக்கும்போது எவ்வித எண்ணங்களும் ஏற்படாமல் இருத்தல்.

16. துரியத்தில் துரியம் - மேற்கூறிய பதினைந்து அவஸ்தைகளும் இல்லாமல் அகண்ட பரிபூரணமான பரப்பிரம்மமே நான் என்று அறிந்துணர்ந்து தானாகவே இருத்தல், இதுவே எல்லாவற்றிற்கும் மேலான உன்னத நிலை என்பதைத் தெளிந்துணர்ந்தால் எல்லாம் பிரம்ம மயம் என்பதைக் காணலாம்.

மூன்று உடல்கள் ( சரீரத் திரயம்)

1. ஸ்தூல சரீரம் 2. சூக்ஷ்ம சரீரம் 3. காரண சரீரம்  இவை தமிழில் முறையே 1. பருவுடல்; 2. நுண்ணுடல், 3. காரண உடல் என வழங்கப்படும்.

பருவுடல்- கண்களுக்குப் புலனாகும் மாமிச உடல் இது ஆதி பிருதிவியினால் (மண்ணியல்பால்) உருவானது.

நுண்ணுடல்: பருவுடலுக்குள் கண்ணிற்குப் புலப்படாமல் நுட்பமாய் அமைந்திருப்பது ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும் அந்தக்கரணங்கள் நான்கும் பிராண வாயு ஒன்றும் கூடியதே நுண்ணுடல் இதை லிங்க சரீரம் என்றும் கூறுவார்கள்.

காரண உடல்: பருவுடல் நுண்ணுடல் ஆகிய இரண்டிற்கும் காரணவித்தாக விளங்குவது இதைச் சஞ்சீத கன்மம் ( தொகை வினை) என்று கருதலாம்.

பற்றுகள் மூன்று (மூவேடணை)

1. அர்த்த வேடணை (பொருட்பற்று); 2. புத்திர வேடணை (புதல்வர் பற்று); 3. லோக வேடணை (உலகப் பற்று). வேறு சிலர் தாரேஷணை (மனைவி மீது ஆசை). புத்திரரேஷணை (தன் மக்கள் மீது ஆசை). தனேஷணை (பொருளாசை) என்று கூறுவார்கள்.

பஞ்சாசயங்கள்

1. அமர்வாசயம்; 2. பகிர் வாசயம் ; 3. சலவாசயம்; 4. மல வாசயம்; 5. சுக்கிலவாசயம் இவை தமிழில் முறையே 1. இரைக்குடல் 2. செரிக்குடல் 3. நீர்க்குடல்; 4. மலக்குடல்; 5. வெண்ணீர்க்குடல் என வகுக்கப்பட்டு ஐந்து குடல்கள் என வழங்கப்படுகின்றன.

மாயைகள் மூன்று

1. சுத்த மாயை; 2. அசுத்த மாயை; 3. பிரகிருதி மாயை. இவை தமிழில் முறையே 1. தூமாயை; 2. தூவாமாயை; 3. பகுதிமாயை என வகுக்கப்பட்டு மாயைகள் மூன்று என வழங்கப்படுகின்றன.

கர்மங்கள் மூன்று

1. சஞ்சித கன்மம்; 2. பிராரத்த கன்மம் ; 3. ஆகாமிய கன்மம், இவை தமிழில் முறையே, 1. தொகை வினை, இருப்பு வினை 2. துவக்க வினை, நுகர் வினை; 3. நிகழ்வினை என வகுக்கப்பட்டு கர்மங்கள் மூன்று என வழங்கப்படுகின்றன.

கன்மேந்திரிய விஷயங்கள்

1. வசந்தம்; 2. கமநம்; 3. தாநம்; 4. விசர்ச்சனம்; 5. ஆநந்தம் இவை தமிழில் முறையே 1. சொல்லல்; 2. நடத்தல் 3. கொடுத்தல்; 4. விடுதல்; 5. மகிழ்தல் என்று வகுக்கப்பட்டு தொழிலுறுப்புக்களின் செயல்கள் என வழங்கப்படுகின்றன.

இருகன்மங்கள்

1. புண்ணியம்; 2. பாவம். இவை தமிழில் முறையே 1. நல்வினை; 2. தீவினை என வகுக்கப்பட்டு இரு வினைகள் என்று வழங்கப்படுகின்றன.

வாக்குகள்

1. வைகரி வாக்கு; 2. மத்திமை வாக்கு ; 3. பைசந்தி வாக்கு; 4. சூக்குமை வாக்கு. இவை தமிழில் முறையே. 1. செவியோசை; 2. மிடற்றோசை; 3. நினைவோசை; 4. நுண்ணோசை என வகுக்கப்பட்டு வாக்குகள் என்று வழங்கப்படுகின்றன.

சக்திகள்

1. பரிக்கிரகசக்தி; 2. திரோதான சக்தி , (ஆதி சக்தி;) 3. இச்சா சக்தி; 4. ஞான சக்தி; 5. கிரியா சக்தி; 6.சிற் சக்தி; இவை தமிழில் முறையே. 1. வைப்பாற்றல்; 2. மறைப்பாற்றல்; 3. விழைவாற்றல்; 4. அறிவாற்றல்; 5. செயலாற்றல். 6. அறிவாற்றல் என வகுக்கப்பட்டு. ஆற்றல்கள் என வழங்கப்படுகின்றன.

சுத்தவித்தியா தத்துவங்கள்

1. காலம்; 2. நியதி 3. கலை; 4. வித்தை; 5. அராகம்; 6. புருடன், 7. மாயை இவை தமிழில் முறையே 1. காலம் 2. பிறழா நிகழ்ச்சி; 3. கலை; 4. நினைப்பு; 5. விருப்பு 6. மகன்; 7. மாயை என வகுக்கப்பட்டு ஏழு உணர்வு நிகழ்ச்சிப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன.

ஓம் என்னும் மகாமந்திரம்

ஓம் என்னும் மகாமந்திரம் பிராணிகளை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் சாமர்த்தியம் கொண்டிருப்பதால். அது பிராணவ மந்திரம் என்றும் சொல்லப்படும். ஏகாட்சரமான ஓம் என்பதில் அ , உ, ம் என்ற மூன்று ஒலிகளும் சேர்ந்துள்ளன. அந்த அகார, உகார  மகாரங்களை மாத்திரைகள் என்றும் சொல்லுவார்கள். அம்மூன்றைத் தவிர நான்காவது மாத்திரையாக அ மாத்திரை என்று ஒரு அர்த்த மாத்திரையும் உள்ளடங்கியிருக்கிறது.

அ என்றால் சூரியன் உ என்றால் சந்திரன். ம் என்றால் அக்கினி. அதாவது ஓம் என்பது எல்லாப் பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுயவடிவாகும்.

இந்த அகாரம் உகாரம் மகாரம் மூன்றும் முறையே ஸ்தூலம் (பருஉடல்) சூட்சுமம் (நுண்ணுடல்), காரணம் (லிங்க உடல்) என்னும் மூன்று உடல்களாக இருந்தும் பெண், ஆண், அலி என்னும் மூன்றுமாக இருந்தும் ருக்வேதம், யஜுர் வேதம், சாம வேதம் என்னும் மூன்று வேதங்களாக இருந்தும் கார்ஹபத்யாக்னி, தக்ஷிணாக்னி, ஆஹவனீயாக்னி, என்னும் மூன்று அக்கினிகளாக இருந்தும் ஹரஸ்வம், தீர்க்கம் ப்லுதம் என்னும் மூன்று ஸ்வரங்களாக இருந்தும் பாதம், நாபி, சிரசு என்னும் மூன்று ஸர்வ அவயவங்களாக இருந்தும் புத்தி, மனம், அஹங்காரம் என்னும் மூன்று ஸர்வ அந்தக்கரண ஸமஷ்டியாக இருந்தும் ரஜோகுணம் ஸத்வ குணம் தமோ குணம் என்னும் மூன்று குணபேதங்களாக இருந்தும், சிவப்பு, கபிலம், கறுப்பு, என்னும் மூன்று வர்ணங்களாக இருந்தும் பூரகம், கும்பகம் ரேசகம் என்னும் மூன்று பராணாயாமாப்பியாசமாக இருந்தும். நாதம், பிந்து. களை என்னும் மூன்றுமாக இருந்தும் கிரியா, சக்தி, பிந்து, ஞானசக்தி என்னும் மூன்றுமாகவும், ப்ராஹ்மணீ, வைஷ்ணவீ, ரௌத்ரி என்னும் மூன்றுமாக இருந்தும் பிரும்மா, விஷ்ணு, ருத்திரன், என்னும் திரிமூர்த்திகளாக இருந்தும், சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம், என்னும் மூன்று காலங்களாக இருந்தும், ஜீவாத்மா, அந்தராத்மா, கூடஸ்தன் என்னும் மூன்றுமாக இருந்தும். விராட் புருஷன் ஹிரண்யகர்ப்பன். ஈஸ்வரன் என்னும் மூன்றுமாக இருந்தும் எல்லாம் ஓம் என்பதில் அடங்கும் என்பதைக் குறிக்கும்.

ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்)

இது சிவயநம அல்லது நமசிவய என்பதாகும். இவ் எழுத்துக்களில் ய என்னும் மந்திரம் ஜீவனாக இருக்கிறது. நம் உடலில் ய போல் அடிபெருத்து நுனி சிறுத்து லிங்க வடிவாய் இருப்பது மூக்குத் தண்டு ஆகும். அந்த மூக்குத் தண்டில் சிவபெருமான் ஜீவனாக நின்று  சிவயநம என்னும் ஐந்தெழுத்தையே (பஞ்சாட்சரத்தையே) தம் திருவுருவமாகக் கொண்டு ஆத்மாக்களின் பிறவியறுக்கத் தக்க யோக நிலையை நடனம் செய்து காட்டுகிறார்.

இதன் மந்திரங்கள்: ய என்னும் ஜீவனால் மூக்கின் வழியே நம என்னும் மந்திரத்தை மூச்சுடன் சேர்த்து உள்ளுக்கிழுத்து மூச்சை வெளிவிடாமல் சிறிது நேரம் உள்நிறுத்தி மறுபடியும் மூச்சை வெளியிடும்போது சிவ என்னும் மந்திரத்தை மூச்சுடன் சேர்த்து வெளிவிட வேண்டும்! இதுதான் நமசிவ என்னும் மந்திரங்களை ஜெபிக்கும் முறையாகும். இந்தப் பஞ்சாட்சர மந்திரமே பிருதிவி (நிலம்) அப்பு (நீர்), தேயு (நெருப்பு) வாயு (காற்று) ஆகாயம் (விசும்பு) என்னும் ஐம்பூதங்களாகும். இவையே பிரும்மா, விஷ்ணு ருத்திரர், மகேசுவரர் சதாசிவம் இந்த ஐவரும் முறையே நம் உடலிலுள்ள சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம் விசுத்தம், ஆக்ஞேயம் என்பனவற்றிற்கு அதிதேவதைகளாக இருந்து மூச்சை நடத்திக் கொண்டு வருகிறார்கள். பிருதிவி (நிலம் அல்லது பூமி) என்பது நகாரம். இந்த மகாரமே விஷ்ணு). தேயு (நெருப்பு அல்லது அக்கினி) என்பது சிகாரம். இந்த சிகாரமே ருத்திரர், வாயு (காற்று) என்பது வகாரம். இந்த வகாரமே மகேசுவரர். ஆகாயம் (விசும்பு அல்லது வெளி) என்பது யகாரம். இந்த யகாரமே சதாசிவம்.


பஞ்ச முத்திரை

1. கேசரி; 2. பூசரி, 3. மத்திய லக்ஷணம்; 4. ஷண்முகீ; 5. சாம்பவீ.

1. கேசரி - விழிகளை நடுவில் நிறுத்தி மேல் நோக்கி சிதாகாசத்தை (அருள் வெளியை) பார்த்துக் கொண்டிருத்தல்.

2. பூசரி - விழிகளை அசைக்காமல் தன் மூக்கு நுனிக் குறியில் நோக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல்.

3. மத்திய லக்ஷணம் - கண்களை அரைப் பார்வையோடு மூடிக் கொண்டு மூக்கு மத்தியில் நோக்கை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருத்தல்.

4. ஷண்முகீ - காதுகளையும், கண்களையும், மூக்கையும், வாயையும், விரல்களால் மூடி, வெளிப்பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பிக் கண் விழிகளை நடுவே நிறுத்தி நாத (பிராணன்), பிந்து, (மனம்) களை (புத்தி) என்பனவற்றை ஒன்றாய் சேர்த்தல்.

5. சாம்பவீ - விழிகளை இமை கொட்டாமல் திறந்து பார்வையை அருள் வெளியான சிதாகாசத்தில் நிறுத்தி அங்குள்ள விந்தை மண்டலங்களைப் பார்த்துச் சொக்கியிருத்தல்.

பஞ்ச சிவ தத்துவங்கள்

1. சுத்த வித்தை: 2. ஈசுரம்; 3. சாதாக்கியம் ; 4. சக்தி; 5. சிவம். இவை தமிழில் முறையே. 1. தூய நினைவு; 2. தலைமை; 3. அருள் நிலை; 4. அன்னை; 5. அத்தன் என வகுக்கப்பட்டு ஐந்து சிவநிலைய பொருள்கள் என வழங்கப்படுகின்றன.

அட்டமா சித்திகள்.

1. அணிமா; 2. மகிமா; 3. கரிமா; 4. இலகிமா; 5. பிராப்தி; 6. பிராகாமியம்; 7. ஈசத்துவம்; 8. வசித்துவம் இவை தமிழில் முறையே 1. நுண்மை (அணுத்தன்மை) 2. பருமை; 3. விண்டன்மை 4. மென்மை ; 5. விரும்பிய தெய்தல் 6. நிறைவுண்மை 7. ஆட்சியனாதல்; 8. கவர்ச்சி; என வகுக்கப்பட்டு எண்பெரும் பேறுகள் என வழங்கப்படுகின்றன.

மோட்சம்

ஞானேந்திரியங்கள் ஐந்து: கர்மேந்திரியங்கள் ஐந்து; தன்மாத்திரைகள் ஐந்து: பிராணங்கள் ஐந்து; அந்தக்கரணங்கள் நான்கு ஆக இருபத்தி நான்கு தத்துவங்களும் சேர்ந்திருப்பது உடல், அந்த உடலினுள் வசிக்கும் ஜீவன் 25 வது தத்துவமாகும். 26 வது தத்துவம் பரப்பிரும்மம் ஆகும். அந்தப் பரப்பிரும்மத்தில் ஜீவாத்மாவைச் சேர்ப்பித்து இரண்டற ஒன்று கலந்து ஒன்றிப்பதே மோட்சமாகும். அதாவது மோட்சமென்றால் விடுதலை.